கடலைப் பருப்பைப் போளி செய்யும்போது பூரணத்தில் வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரை சேர்த்தால் போளி மெலிதாகவும், வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய்ப் பூரணம், உளுந்து பூரணம் போல பருப்பு உசிலி, வேக வைத்த காய்கறிகள், வேக வைத்த பயறு வகைகள், ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சை போன்றவைகளையும் பூரணம் ஆக வைத்துப் போளி செய்யலாம்.
பிரெட்டை உதிர்த்து முந்திரி, பாதாம் துண்டுகள், மில்க் மெய்டு கலந்தும் பூரணம் செய்யலாம். மேல் மாவுக்கு மைதா மாவைப் பயன்படுத்துவது போன்று, கோதுமை மாவு, ரவையையும் பயன்படுத்தலாம்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், இட்லி, மிளகாய்ப் பொடியை வதக்கி, காரப் பூரணம் செய்யலாம்.
தேங்காய்ப் பூரணத்துக்குத் தேங்காய்த் துருவலை சிறிது நெய்யில் வதக்கிவிட்டுச் செய்தால் சீராக வரும். மணமும் சுவையும் கூடும்.
போளி செய்யும்போது மேல் மாவை வெண்ணெய் கொண்டு பிசைந்து செய்தால் போளி மென்மையாக வரும்.