
கடுகு இல்லாவிட்டால் கஷ்டம்!
தென்னிந்தியர்கள் கடுகு எண்ணெய் வாசனையை முகர்ந்தாலே நகர்ந்துவிடுவர்.
தென்னிந்தியர்கள் கடுகு எண்ணெய் வாசனையை முகர்ந்தாலே நகர்ந்துவிடுவர். ஆனால், அஸ்ஸாமிய கலாசாரத்தில் அதற்கு வாழ்க்கையுடன் என்றென்றும் தொடர்பு உண்டு. அவர்களுக்கு சமையலில் கடுகு எண்ணெயும், மஞ்சளும் கலக்காவிட்டால் சுவைக்காது. பாரம்பரியச் சடங்குகள், அழகு, உடல் நலப் பராமரிப்பிலும் அதற்கு முக்கிய இடம் உண்டு. இந்த வகையில் சில பாரம்பரிய அழகுச் சடங்குகளை அறிவோம்.
மாஹ ஹலோதி: அஸ்ஸாமில் நடைபெறும் மஞ்சள், பருப்புச் சடங்கு இது. கருப்புப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, நன்கு ஊறியவுடன் குளிப்பர். அஸ்ஸாமிய நம்பிக்கையின்படி பருப்பும், மஞ்சளும் மென்மையான சுத்திகரிப்புப் பொருளாகும்.
கடுகு எண்ணெய்: அஸ்ஸாமின் கலாசாரத்தில் வீட்டு உணவு, உடல் பராமரிப்பு நடைமுறைகளில் கடுகு எண்ணெயின் பரவலான பயன்பாடு அதிகமாக உள்ளது. அஸ்ஸாமியரின் திருமண விழாவில் 'டெல்தியா' எனப்படும் சடங்கில், மணமகள் உடல் முழுவதும் கடுகு எண்ணெய் பூசப்படுகிறது. தாய் மாமன், பாட்டிகள் உள்ளிட்ட பலரால் செய்யப்படும் சடங்கு இது. தேசிய மருந்தக நூலின் ஆய்வின்படி, நாட்டில் பல ஆண்டுகளாக முடி பராமரிப்பில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு விளைவுகள் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அரிசி நீர்: வடகிழக்கு இந்தியாவின் பாரம்பரிய பழைமையான கூந்தல் பராமரிப்பு முறையாக அரிசி நீரை பெண்கள் தங்கள் கூந்தலுக்குப் பயன்படுத்துகின்றனர். இது பளபளப்பாகவும் வலிமையாகவும் நீளமாகவும் ஆக்குவதாக அவர்கள் நம்புகின்றனர்.
போஹாக் பிஹு: புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, கடுகு எண்ணெய், மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பொதுவான சமையலான மீன் உணவுகள், காய்கறி வதக்கல்கள் வரை அனைத்திலும் கடுகு எண்ணெய், மஞ்சள் இடம் பிடிக்கின்றன. அஸ்ஸாமிய கிராமங்களுக்குச் சென்றால் சூடாக்கிய கடுகு எண்ணெயின் வாசனை காட்டிக் கொடுக்கும்.
உடல் பராமரிப்பு:
தோல், முடி பாதுகாப்புக்கு மஞ்சள், கடுகு எண்ணெயைச் சேர்த்து உடல் முழுவதும் பூசிக்கொள்கின்றனர். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு உடலில் சூடு ஏற்றவும், வலிமையைக் கூட்டவும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறவும் கடுகு எண்ணெயைத் தடவுகின்றனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




