நம்மைச்சுற்றி நடப்பது என்ன?

அன்பான தம்பி தங்கைகளே! உங்கள் அன்பிற்குரிய சிறுவர்மணியின் வாயிலாக நீங்கள் நல்ல கதைகளைப் படித்து வருகிறீர்கள். நல்ல பாடல்களை அறிகிறீர்கள். மேலும் ஓவியம், அறிவியல், திரைப்படம், உலக நாடுகள் பற்றியெல்லாம்
நம்மைச்சுற்றி நடப்பது என்ன?
Updated on
2 min read

அன்பான தம்பி தங்கைகளே! உங்கள் அன்பிற்குரிய சிறுவர்மணியின் வாயிலாக நீங்கள் நல்ல கதைகளைப் படித்து வருகிறீர்கள். நல்ல பாடல்களை அறிகிறீர்கள். மேலும் ஓவியம், அறிவியல், திரைப்படம், உலக நாடுகள் பற்றியெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்கிறீர்கள் அல்லவா! அதோடு சேர்த்து நாம் இன்னுமொரு விஷயத்தைப் பற்றியும் பேசுவோமா?     நீங்கள் ஆர்வத்துடன், ""எதைப் பற்றிப் பேசப்போகிறோம்?'' என்று உரத்துக் கேட்பது   எனக்கும் கேட்கிறது. இதோ சொல்கிறேன், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நாம் ஆராயப் போகிறோம். இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லட்டுமா?

நமக்கு மாநில அளவில் தமிழ்நாட்டு அரசு இருக்கிறது. இந்திய அளவில் மத்திய அரசு இருக்கிறது. மாநில அரசில் பலவிதமான அதிகாரப் படிநிலைகள் உள்ளன. மத்திய அரசிலும் அப்படித்தான். உதாரணமாக நாம் முதலில் நம் தமிழ்நாட்டு அரசை எடுத்துக்கொள்வோமே. இங்கே உள்ளாட்சி முறை செயல்படுகிறது. இந்த உள்ளாட்சி    முறையில், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி,  நகர்ப்புற   ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகள் உண்டு. இவற்றிற்கு மேலாக     உள்ளதுதான் சட்டமன்றம். இந்த அமைப்புகளும், அதில் பொறுப்பு வகிக்கின்ற அதிகாரிகளும்தான் நம் ஜனநாயகக் குடியரசை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று எல்லாப் பிரிவுகளும் சேர்ந்த ஒரு பெரிய அமைப்பைத்தான் அரசு இயந்திரம் என்று சொல்வார்கள். ஒரு இயந்திரத்தில் பல்வேறு பகுதிகளும், உறுப்புகளும் உண்டல்லவா. அவை எல்லாமும் மொத்தமாகச் சேர்ந்ததுதானே ஒரு இயந்திரம். அதுபோல, பல்வேறு பிரிவுகள் சேர்ந்த ஒரு பெரிய அரசமைப்பைத்தான் அரசு இயந்திரம் என்று சொல்வார்கள். இந்த அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைத்தான் நாம் இங்கே    பார்க்கப்போகிறோம்.

உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி அமைப்பு, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றைப் பற்றியும், அவற்றின் உறுப்பினர்கள் பற்றியும், அவர்களுக்கான அதிகாரம் பற்றியும் நாம் அறிந்துகொள்ளலாம். அமைச்சர்கள், முதலமைச்சர், கவர்னர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், குடியரசுத் தலைவர், நீதி மன்றங்கள், ராணுவம் பற்றியெல்லாம் நாம் பேசுவோம்.

அப்புறம், நம் மக்களாட்சிக்கு அடிப்படையான மிகவும் முக்கியமான ஒரு அமைப்பைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளப் போகிறோம். அது என்ன?

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையெல்லாம் நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கின்றோம் அல்லவா? அந்தத் தேர்தலை நடத்துகிற தேர்தல் ஆணையத்தைப் பற்றியும், அதில் பொறுப்பு வகிக்கின்ற அதிகாரிகளைப் பற்றியும் நாம் காண்போம்.

இன்னொன்றையும் இங்கே சொல்லிவிடுகிறேன். இதை நீங்கள் நம்புவீர்களோ   மாட்டீர்களோ,ஆனால் உண்மை. அதாவது, ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைத் தொடர்ந்து படித்து வந்தால் அதனால் நிச்சயம் பயன் ஏற்படும். இது பழைய காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற நம் நம்பிக்கை.

"நம்மைச் சுற்றி நடப்பது என்ன?' பகுதியைத் தொடர்ந்து படிக்கப்போகும் நீங்கள்தான் எதிர்காலத்தில் நம் நாட்டின் பிரதமராகவோ, அமைச்சராகவோ, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவோ ஆகப்போகிறீர்கள். உங்களில் ஒருவரே குடியரசுத் தலைவராகவும் ஆகப்போகிறீர்கள். எதிர்கால உலகை ஆளப்போவது  நீங்கள்தானே!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com