மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள். இதில் என்ன பிரமாதம்? உலகத்தின் பல நாடுகளிலும்தான் இந்துக் கடவுளின் திருக்கோயில்கள் இருக்கின்றதே... என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயமே!
கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதற்குப் பயன்படுத்தியுள்ள கண்ணாடிகள் அனைத்தும் தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாம். இந்தக் கோயிலை நிர்மாணிக்க மலேசிய மதிப்பில் மூன்று மில்லியன் ரிங்கிட்ஸ் (இந்திய மதிப்பில் 39 மில்லியன் ரூபாய்!) பணம் செலவானதாம்.
இந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கு தாய்லாந்தில் தான் பார்த்த கண்ணாடிக் கோயிலே முன் மாதிரியாக இருந்தது என்கிறார் அறங்காவலரான எஸ். சின்னதம்பி.