

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வசிக்கும் வண்ண மீன்கள் பல இருந்தாலும் பல்வேறு சிறப்புக்களை உடையது கிளிஞ்சான் மீன். இவற்றின் அழகை ரசிக்கவே கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து பலரும் வளர்க்க விரும்புவதால் வண்ண மீன்கள் விற்பனையில் அதிக வருவாய் ஈட்டித் தரும் மீனாகவும் இருந்து வருகிறது கிளிஞ்சான். இவற்றின் தோற்றம்,உணவு மற்றும் சிறப்புகள் குறித்து பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விஜய் ஆனந்த் தெரிவித்தது..
""ஆங்கிலத்தில் ராசஸ் என அழைக்கப்படும் கிளிஞ்சான் மீன்கள் மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றன. இவற்றில் நெப்போலியன் வகை மீன்களின் உதடுகள் ரப்பர் போன்று பெருத்துக் காணப்படுவதால் இவற்றை உணவுக்காகவும் அதிகஅளவில் பிடிக்கப்படுகிறது.இந்த அழகிய உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து கொண்டே வருவதால் அரசு இதனைப் பிடிக்கவும் தடை விதித்துள்ளது.
இம்மீன்கள் ஓர் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரையும் வாழக்கூடியவை. அதிகபட்சமாக 20செ.மீ.முதல் 8 மீட்டர் நீளம் வரை வளரும். கடலில் தன்னோடு வாழும் மற்ற மீன்களின் மீது இருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்றி அவற்றை உணவாக்கிக் கொள்வதுடன் அம்மீன்களின் மீதுள்ள காயங்களையும் சுத்தப்படுத்துகின்றன. பிற மீன்கள் ஆரோக்கியமாக இருக்க சேவை செய்வதால் இவற்றை டாக்டர்.ராசஸ் என்றும் அழைக்கிறார்கள்.
சிறுமீன்கள், இறால்கள், பல்சுனைப்புழுக்கள், நத்தைகள், சிப்பிகள், மட்டிகள் மற்றும் மீன் முட்டைகளும் குஞ்சுகளும்தான் இவற்றின் உணவுப்பட்டியல்.
இம்மீன்கள் கடல் பாசிகளுக்குள் வாழ்ந்து கூடு கட்டி அப்போது இடுகின்ற முட்டைகளையும் பாசிகளில் ஒட்டி வைத்து விடுகின்றன. பின்னர் அவையே குஞ்சுகளாகவும் மாறி விடுகின்றன.
இம்மீன்களின் பாலின மாற்றம் ஒரே மீனில் ஏற்படுவதுதான் வியப்புக்குரியது. கூட்டம்,கூட்டமாகவும் அதே நேரத்தில் சிறுகுழுக்களாகவும் வாழும் இவற்றில் ஆண்மீன்கள் தான் இனப்பெருக்கத்தின் தலைவனாகவும் இருக்கின்றன. இந்த வேளையில் மற்ற மீன்களைப் பாலின மாற்றம் ஏற்படவிடாமலும் தடுத்து விடுகின்றன. குழுவின் தலைவனாக இருக்கும் ஆண் மீன் இறந்து விட்டாலோ அந்தக் குழுவில் உள்ள பெண் மீன் ஒன்று தானாகவே ஆணாக மாறி தலைவனாக பதவியேற்றுக் கொள்கின்றது.
உலகஅளவில் 600வகைகள் இருப்பதாகவும் இந்தியாவில் மட்டும் 12 வகைகள் இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர். இதில் தாலசோமா லூனார் என்ற மூன்ராசஸ் மீன்கள் மட்டும் பார்ப்பதற்கு நிலவின் பிறை போன்ற வால்பகுதி வளைவாக காணப்படுகிறது.வீடுகளில் கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து வளர்க்கும் வகையில் எளிதாகப் பாதுகாத்து நன்கு வளர்க்கவும் முடியும். இந்த அரியவகை மீனினம் இளம் வயதில் ஒரு நிறத்திலும் முதிர்ச்சிக் காலத்தில் வேறொரு நிறத்திலும் காணப்படும் ஓர் அபூர்வ ஜீவன்'' என முனைவர் பா.விஜய்ஆனந்த் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.