நூற்றுபத்து கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய கெüரவமாக திகழ்ந்து கொண்டிருப்பது நமது இந்திய நாடாளுமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பானதால், "மக்களவை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளில் பல சட்ட மேதைகளின் ஆலோசனையின்படி, பல நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களை ஆழமாக படித்துத் தெளிந்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950, ஜனவரி 26-ஆம் நாள் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் 1951-இல் நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பின் முதல் மக்களவை பிரதமர் நேருவின் தலைமையில் 1952, மே 13-ஆம் நாள் கூடியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றார் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதற்கான சட்டத் திருத்தமோ அல்லது புதிய சட்டமோ குறித்து விரிவான விவாதங்களுக்குப் பின் இரண்டு அவைகளின் பரிபூரண சம்மதத்துடன்தான் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். ஓர் அவையில் ஆதரிக்கப்படும் தீர்மானம் இன்னொரு அவையில் ஆதரவை இழப்பதும் உண்டு. இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறும் தீர்மானங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி எந்தவொரு திட்டமும், தீர்மானமும், சட்டமும் நாட்டில் அமல்படுத்தமுடியாது.
நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பவர் சபாநாயகர். மக்களவைக் கூட்டத்தின் முதல் நாளில் உறுப்பினர்களின் ஓட்டெடுப்பின் மூலம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பவரும் இவரே. சபையை சீரோடும் சிறப்போடும் வழிநடத்துவதற்கான மிகப் பெரிய பொறுப்பு சபாநாயகருடையது. சபையின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பும் அதை மீறி நடக்கும் உறுப்பினர்களை தண்டிக்கும் உரிமையையும் கொண்டவர் சபாநாயகர்.
சபாநாயகராகப் பொறுப்பேற்பவர், அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுதான் சபாநாயகர் பதவிக்கு வரமுடியும். இதற்கு அர்த்தம், சபாநாயகர் என்பவர் கட்சி சார்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். நியாயத் தராசாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த வகையில், முதல் நாடாளுமன்ற சபாநாயகர் என்னும் பெருமையைப் பெற்றவர் ஜி.வி.மாவ்லங்கர். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு சபாநாயகராக இருந்த பெருமையைப் பெற்றவர் பல்ராம் ஜாக்கர். தற்போது சபாநாயகராக இருக்கும் மீரா குமார், இந்தியப் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைவதை "தொங்கு நாடாளுமன்றம்' என்று அழைப்பார்கள்.
ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னும் கூடும் முதல் மக்களவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, துறை சார்ந்த அமைச்சர்கள் அவர்கள் சார்ந்த துறையில் செய்ய இருக்கும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கவும் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கவும் ஒதுக்கப்படும் நேரம், "கேள்வி நேரம்' என்றழைக்கப்படுகிறது.
சபாநாயகரின் அனுமதியோடு ஓர் உறுப்பினர் சபையின் அன்றைய விவாதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் பிரச்னைகள் குறித்தும் கேள்விகளை எழுப்புவதற்கு வழிவகை செய்வதை "ஜீரோ ஹவர்' என்பர்.
பொதுவாக நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூடும். பட்ஜெட் நிறைவேற்றுவதற்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மழைக் கால கூட்டத் தொடரும், நவம்பர் முதல் டிசம்பர் வரை குளிர்காலக் கூட்டத் தொடரும் நடக்கும்.