சினி மினி

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் சினிமாவில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார் நயன்தாரா.
சினி மினி
Updated on
2 min read

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான "மூன்றாம் பிறை' இந்திய அளவிலும் சிறப்பான பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தின் மூலம் கமல் தேசிய விருதையும் பெற்றார். ஹிந்திக்கு "சத்மா' என்ற பெயரில் ரீமேக்கான படத்துக்கும் ஏகப்பட்ட வரவேற்பு. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதிக் காட்சியில் கமலை பிரியும் ஸ்ரீதேவி உண்மை தெரிந்து அவரிடமே வந்து சேருவது போல் கதை அமைக்கப்பட்டு வருகிறது. கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை சொல்லப்பட, மறுத்து விட்டாராம் கமல்.

வசந்த் இயக்கும் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் சேரன் மற்றும் விமலுடன் இணைந்து நடித்திருக்கும் அர்ஜூன் இனி மல்டி ஸ்டார் படங்களை தவிர்க்க முடியாது என கூறுகிறார். ""இரண்டு, மூன்று ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது ஹிந்தி சினிமாவில்தான் பிரபலமாக இருந்தது. இப்போது தமிழ் சினிமாவிலும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. "மங்காத்தா' படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தபோதே, பலரும் இதை பற்றிதான் கேட்டார்கள். அப்போது சொன்ன பதில்தான் இப்போதும், ஸ்டார் ஹீரோக்கள் இப்போது அதிகமாக கதைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் ஒருவருடன் ஒருவர் இணைந்து நடிப்பதில் "ஈகோ' பார்ப்பதில்லை'' என்றார் அர்ஜூன்.

பிரகாஷ்ராஜ், பூமிகா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான படம் "கலெக்டர் காரு பாரியா.' இப்போது தமிழில் டப்பிங் ஆகிறது. பெண்களை
அதிக அளவில் கவர்ந்த இப்படத்துக்கு "பெண் அடிமை இல்லை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கணவன், மனைவிக்கிடையான அன்பு, பாசம், காதல், பிரிவு என அனைத்து விஷயங்களையும் சொல்வதுதான் கதை. நேர்மையான கலெக்டரான பிரகாஷ்ராஜூம், எம்.பி.ஏ. படித்து நல்ல வேலையில் இருக்கும் பூமிகாவுக்குமான இல்லற வாழ்க்கைதான் திரைக்கதை. பிரம்மானந்தம், தணிகலபரணி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரம் ஏற்க, இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தெலுங்கு சினிமாவின் பிரபலமான இயக்குநர் கிருபாகர் ரெட்டி.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் சினிமாவில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார் நயன்தாரா. இதில் முதலாவது படமாக தெலுங்கில் வெளிவந்த "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லையாம். அடுத்து, நயன்தாராவின் நடிப்பு பற்றியும் தெலுங்கு மீடியாக்கள் எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்துள்ளதால் நயன்தாரா கவலையடைந்துள்ளாராம். ""இந்த ஒரு படத்தை வைத்து என் சினிமா பயணத்தை நிர்ணயித்து விட முடியாது'' என டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து இயக்கும் படம் "வல்லினம்'. "வேலாயுதம்' படத்துக்குப் பின் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். விளையாட்டை வாழ்க்கையாக நினைக்கும் ஹீரோவுக்கும், வாழ்க்கையை விளையாட்டாக கொண்ட ஹீரோயினுக்குமான காதல்தான் கதை. நகுல் ஹீரோவாக நடிக்க, புதுமுகம் மிருதுளா ஹீரோயினாக நடிக்கிறார். ""பொதுவாக விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்றால் இரு அணிக்குமான மோதலாகத்தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஆனால், இதில் மோதுவது கூடைப்பந்தும், கிரிக்கெட்டும்'' என சுவாரஸ்யம் கூட்டுகிறார் அறிவழகன்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com