/

சைக்கிளைச் சுற்றினால் மின் விசிறி ஓடும்!

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் பலவிதமான சாதனைகளைச் செய்து வருகிறார்கள். அவர்களது சாதனைகளுக்கு அங்கீகாரம் தருவதைப் போல, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் அறிவியல் திறனை

News image
Updated On :16 பிப்ரவரி 2014, 3:31 am

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் பலவிதமான சாதனைகளைச் செய்து வருகிறார்கள். அவர்களது சாதனைகளுக்கு அங்கீகாரம் தருவதைப் போல, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 மாணவர்கள் மத்தியில் அறிவியல் பாடம் படிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் பயிற்சி எதுவும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களும் உள்ளார்கள்.
 விருதுநகர் மாவட்டம் சிவகாசி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களான கே.விக்னேஷ்குமார், எஸ்.ஷேக்சையத் ஒலியுல்லா ஆகிய இருவரும், சைக்கிளை நிற்க வைத்து, அதன் பெடலை மிதித்து, அதில் கிடைக்கும் சக்தியை டைனமோ மூலம் மின்சாரம் ஆக்கி, பல்பு, மின்விசிறியை இயக்கி காட்டி சாதனை புரிந்துள்ளார்கள்.
 திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் தாங்களது அறிவியல் கண்டுபிடிப்பினை காட்சிக்கு வைத்து, முதல்பரிசும், இளம் விஞ்ஞானி விருதும், ரொக்கம் ரூபாய் 25ஆயிரமும் பெற்றுள்
 ளார்கள்.
 விஞ்ஞானி ஜி.மணிகண்டன் உள்ளிட்டோர் இவர்களது கண்டுபிடிப்பினை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இது குறித்து மாணவர்களிடம் கேட்டோம்.
 உங்கள் கண்டுபிடிப்பினை பற்றி?
 நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளில், டைனமோ, மோட்டார், மின்விசிறி, செல்போன் சார்ஜர், பல்பு ஆகியவை வைத்துள்ளோம். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளில் உள்ள பெடலை சுற்றினால் டைனமோ மூலம் மின்சாரம் கிடைக்கும். அதில் 12 வோல்ட் கொண்ட மின்விசிறி, 19 வோல்ட் கொண்ட பல்பு, ஒரே நேரத்தில் 6 மொபைல்கள் சார்ஜ் செய்யும் வசதிகிடைக்கும். சைக்கிளில் சுமார் 30 நிமிடம் பெடல் செய்தால் ஒரு நாள் முழுவதும் அவற்றை இயக்க முடியும். இதுவே எங்கள் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பை தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்த பின்னர்தான் எங்களுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது.
 இதனால் என்ன பயன்?
 வீட்டில் உள்ள பழைய சைக்கிளை இதற்குப் பயன்படுத்தலாம். பெடல் செய்யும்போது, சிறந்த உடற்பயிற்சி ஆகிறது. பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை தேவைப்படும்போது, பயன்படுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சியும், செலவில்லாமல் மின்சாரமும் இதன்மூலம்
 கிடைக்கும்.
 இதனைக் கண்டுபிடிக்க உங்களுக்குத் தூண்டுதலாக எது
 இருந்தது?
 தற்போது சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சைக்கிள் சக்கரம் சுற்றும் போது, அதில் டைனமோவை இயக்கி, அதிலிருந்து சைக்கிளில் உள்ள பல்பினை எரிய வைத்தார்கள். இந்தமுறையிலேயே பல்பு எரிவதுடன் வேறு ஏதாவது பயன்கிடைக்குமா? என யோசனை செய்தோம். பழைய காரின் டைனமோவை வாங்கி இணைத்து, பேட்டரியில் மின்சாரத்தை சேமித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன? என்ற யோசனையைச் செயல்படுத்தினோம். வெற்றி கிடைத்தது.
 புளியங்குடியில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றதுபோல வேறு அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளீர்களா?
 எங்களது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம். வேறு எந்த கண்காட்சியிலும் பங்கு பெற வில்லை.
 உங்கள் கண்டுபிடிப்புக்கு முதல்பரிசு கிடைத்தது குறித்து?
 இது நாங்கள் எதிர்பாராத ஒன்றாகும். அந்த அறிவியல் கண்காட்சியில் 7 மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் சுமார் 150 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைத்திருந்தனர். மாணவர்களின் படைப்புகள் வகுப்பு வாரியாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முதல் பிரிவில் எங்களுக்கு முதல்பரிசு கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதல்பரிசு கிடைத்ததன் மூலம் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. எங்களது சாதனைகள் தொடரும்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.