

அழிந்துவரும் அரிய வகைஇனம் தேவாங்கு. கரூர்மாவட்டம் கடவூர் மலைப்பகுதியில்தற்போது இந்த அரிய வகை இனம் பற்றி கணக்கெடுப்பு நடக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அன்பு கூறியது:
""செந்தேவாங்கு, சாம்பல் நிறத் தேவாங்கு என இரு வகைகளில் காணப்படும் இந்த அரிய வகை விலங்கில் சாம்பல் நிறத் தேவாங்குகள் உலகிலேயே கரூர் மாவட்டம் கடவூர் மலைப்பகுதியில்தான் அதிகளவில் வசிக்கின்றன. இரவில் தேவாங்குகள் வேட்டையாடச் செல்லும்போது மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்கி இறந்து வருகின்றன. மேலும் தேவாங்குகளின் ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுவதால் அவை வேட்டையாடப்படுகின்றன. பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்டு வாழும். சில நேரங்களில் இலை தழைகளையும் உண்ணும்.
அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது. தேவாங்கு வேட்டையைத் தடுக்கும் வகையில் வன அலுவலர்கள் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் தேவாங்கு கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர்கள் தலைமையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் 50 பேர் ஈடுபட்டுள்ளனர்.
தேவாங்கு இரவில் மட்டுமே உணவு தேடி வெளியே வரும் என்பதால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்தக் குழுவினர் கணக்கெடுப்பர். இதன்மூலம் எத்தனை ஆண், பெண் தேவாங்குகள் வசிக்கின்றன, குட்டிகள் எத்தனை உள்ளன என்பதைக் கணக்கெடுத்து, அவற்றைப் பாதுகாக்க வனச்சரணாலயம் ஏற்படுத்தவும், அதன்மூலம் கடவூர் மலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஆலோசித்துள்ளோம்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.