

மக்கள் திரளாக இருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பெரிய கடைவீதியில் இருக்கும் யானை மார்க் நெய் மிட்டாய் கடை சுவைக்கு மட்டுமல்ல பிரசித்தம்..! இனிப்பு கார வகைகளை கட்டித்தர பயன்படுத்தும் மூங்கில் கூடைகளும் பிரபலம் ! இங்கு இனிப்பு கார வகைகளை பிளாஸ்டிக் பைகளில் தருவதில்லை. மூங்கில் இழைகளால் பின்னப்பட்ட மினி கூடைகளில் வைத்து கட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ""இந்த கடை ஆரம்பித்து 105 ஆண்டுகள் ஆகின்றன.
ஆரம்பக் காலத்தில் மூங்கில் கூடைக்குள் காய்ந்த வாழையிலையை விரித்து அதில் இனிப்பு , காரம் வகைகளை வைத்து வாழை மர நாரால் கட்டிக் கொடுப்போம். உலர்த்தப்பட்ட வாழை இலை கிடைக்காததால் இப்போது செய்தித்தாளை கூடைக்குள் விரித்து பலகாரத்தை அதனுள் வைத்து நூலினால் கட்டிக் கொடுக்கிறோம். அரை கிலோ ஒரு கிலோ இனிப்பு வைக்கும்படியான கூடைகள் எங்களிடம் இருக்கின்றன. மூங்கில் இழைகளால் செய்யப்பட்ட கூடைகளை பெண்கள்தான் சப்ளை செய்கிறார்கள். ஒரு கூடையின் எடை 10 லிருந்து 15 கிராம் வரை இருக்கும். இந்தக் கடையை மூன்றாவது தலைமுறை நடத்தி வருகிறது
திருமணம் உட்பட்ட வீட்டு விசேஷங்களுக்கு சீர் கொண்டு போகும் போது மூங்கில் கூடையில் வைக்கப்பட்ட இனிப்பு வகைகளை தட்டில் வைப்பது இந்தப்
பகுதி மக்களின் வழக்கம். அதனால் கல்யாண சீசன் காலத்தில் ஆர்டர்கள் அதிகமாகக் கிடைக்கும். மூங்கில் கூடைக்கு விலை ஏதும் இல்லை. சிலர் பிளாஸ்டிக் பெட்டிகளில் இனிப்புகளைக் கேட்பார்கள். அவர்களிடம் பிளாஸ்டிக் பெட்டிக்கான விலையைத் தனியாக வாங்குவோம். மூங்கில் கூடையில் விற்கப்படும் பலகாரங்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகம் விளைவிக்காத மூங்கில் கூடைகள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் வரை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். எங்கள் கடையை "கூடை மிட்டாய்க் கடை' என்றும் பொது மக்கள் அழைப்பார்கள்.. கரோனா முழு ஊரடங்கு காலத்தில் கடை திறக்கப்படவில்லை. தீபாவளிக்குப் பிறகு பழைய வியாபாரம் திரும்பி உள்ளது...." என்கிறார் கடை உரிமையாளர்களில் ஒருவரான கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.