இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வாசிப்பே வெற்றிக்கு வழி

""வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவு தேடல் செயல்பாடு. குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் படிப்பது மட்டுமே கல்வி அல்ல.

News image
Updated On :17 மே 2020, 1:07 pm

""வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவு தேடல் செயல்பாடு. குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் படிப்பது மட்டுமே கல்வி அல்ல. அது முழுமையான கல்வியுமல்ல. அது மிகச் சரியாக அமைந்தால் கற்றலுக்கு அது வழிகாட்டும்; நெறிப்படுத்தும். வாசிப்பைத் தொடரும் போதுதான் கற்றல் செயல்பாடு விரிகிறது, ஆழமாகிறது'' என்கிறார் "மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ்.

பில்கேட்ஸ் மட்டுமல்ல வாரன் பஃபெட் போன்ற தொழிலதிபர்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவர்கள் அனைவருமே தத்தமது துறையில் சாதித்தவர்கள் என்பது மட்டும் அல்ல, தங்கள் வெற்றிக்கு வாசிப்பு தான் முக்கியக் காரணம் என்று கருதுபவர்கள்.

பில்கேட்ஸூக்கு வாசிப்பு மீது இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்து கொள்ள அவரது கேட்ஸ் நோட்ஸ் என்ற வலைப்பதிவுக்குச் சென்றாலே போதும். இந்த வலைப்பதிவில் பில்கேட்ஸ் தான் வாசித்த புத்தகங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். .

கடந்த 8 ஆண்டுகளில் பில்கேட்ஸ் பரிந்துரைத்த அனைத்து புத்தகங்களையும் "குவார்ட்ஸ்' என்ற இணையதளம் மொத்தமாகப் பட்டியல் போட்டிருக்கிறது. - முதலீடு மூலம் கோடீஸ்வரரான வாரென் பஃபெட், புத்தக வாசிப்பை தனது வெற்றிக்கு முக்கியக் காரணமாக சொல்கிறார்.

முகநூல் நிறுவனர் மார்க், புத்தக வாசிப்பை முக்கியமாகக் கருதுபவர். 2015-ஆம் ஆண்டில் அவர் வாரம் ஒரு புத்தகம் வாசிக்கப் போவதாக கூறி, வாசகர்களையும் தன்னோடு இணைந்து வாசிக்க அழைப்பு விடுத்தார். இன்னும் பல சாதனையாளர்கள் புத்தகங்களை வாசிப்பதை முக்கியமாக வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்காவில் பெட்டர்புக் கிளப் betterbookclub எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் கொஞ்சம் புதுமையான முறையில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கிறது. எப்படி என்றால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் புத்தக வாசிப்பில் ஈடுபடுவதை ஊக்கம் அளிக்க இந்தத் தளம் உதவுகிறது.

நிறுவனங்கள் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் போது பெரிய விஷயங்கள் நடைபெறும் எனும் கருத்தை அடிப்படையாக கொண்ட இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. அதாவது நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பது போல, புத்தகங்களை நன்றாகப் படிக்கும் ஊழியர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிக்கிறது.

இப்படி செய்வதன் மூலம், ஊழியர்களை ஊக்குவிக்கலாம், ஊக்கத்தைப் பரவச்செய்யலாம், ஊழியர்கள் மத்தியில் பொதுவான ஒரு உரையாடலை உருவாக்கலாம் என்று பெட்டர்புக்கிளப் தளம் கருதுகிறது. இந்தத் தளத்தின் நிறுவனரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்னி மால்ஹம். அவர் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்:

எனக்குப் புத்தகங்கள் மீது தீவிர காதல் . புத்தக வாசிப்பே என்னை உருவாக்கியது. என்னிடம் பெரிய புத்தக கலெக்ஷனும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வீடு மாறும்போது புத்தகங்களை வைக்க இடமில்லாமல், எனது அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஊழியர்கள் அந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்துப்பார்ப்பார்கள் என்று நம்பினேன்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் ஊழியர்கள் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. இதனால் வெறுத்துப்போனேன். ஊழியர்கள் புத்தகங்களைப் படிக்க காசு கொடுக்கவும் தயாராக இருந்தேன்.

இந்த எண்ணத்தை செயல்படுத்தவும் செய்தேன். ஒவ்வொரு புத்தகத்திலும் அதைப் படித்தால் தரக்கூடிய தொகையை அதன் உள்ளே எழுதி வைத்தேன். ஆரம்பத்தில் இதற்கு வரவேற்பு குறைவாக இருந்தாலும் மெல்ல ஊழியர்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அதுவே பழக்கமாக மாறியதாகவும் குறிப்பிடுகிறார்.

20 ஆண்டுகளில் இப்படிப் புத்தக வாசிப்பிற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் வழங்கியிருக்கிறார்ஆர்னி. அவரது அனுபவத்தைக் கேள்விப்பட்ட மற்ற வர்த்தக நிறுவனங்களும் இந்த வழியைப் பின்பற்ற உதவி கோரின. இதன் பயனாக, 2014-இல் இதை ஒரு இணையச் சேவையாகவே பெட்டர்புக்கிளப் மூலம் வழங்கத் துவங்கினார்.

ஊழியர்கள் தாங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம், வாசித்து முடித்த புத்தகம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்டவற்றை இதில் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கேற்ப நிறுவனங்கள் புள்ளிகள் அல்லது பரிசுகளைத் தீர்மானிக்கலாம்.

நிறுவனங்கள் எந்த வகையான புத்தகங்களைப் படிக்க வைப்பது என்பதைத் தீர்மானிக்கலாம். ஊழியர்களுக்கு வாசிப்புக்கு ஏற்ப ரேட்டிங்கும் அளிக்கப்படும். இதன் மூலம் ஊழியர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது மேலும் வாசிக்கவும் ஊக்கமாக அமையும்,. புத்தக வாசிப்பு சார்ந்த கலாசாரத்தை உருவாக்குவது நிறுவன வளர்ச்சிக்குப் பலவிதங்களில் உதவும் என்பதே இதன் பின்னே உள்ள நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.