

"பாட்ஷா', "படையப்பா', "எந்திரன்' படங்களைப் போல் ரஜினியின் "ஜெயிலர்' மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இப்படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் ஒன்று கூடி ஊடகங்களை சந்தித்தனர். இதில் கலந்து கொண்டு இயக்குநர் நெல்சன் பேசும் போது.... ""படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று நினைத்து இயக்கவில்லை. படம் நன்றாக வர வேண்டும் என நினைத்து எடுத்தோம்.
படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரை ஆளுமை. அவரது ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு ரஜினிதான் முக்கிய காரணம். இந்த திரைக்கதையின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான் மிக முக்கிய காரணம். பட வெளியீட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், "நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு விஷுவலாக படம் இருக்கிறதா?' என கேட்டேன். அதற்கு அவர், "நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது' என கூறினார்.
இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது. நிறைய பேர் நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் போது, படம் சரியாக வருமா, இவர் சாத்தியப்படுத்துவாரா என பலரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, இதற்கு முக்கியப் புள்ளியாக இருக்கும் ஒருவர் நாம் சொல்வதை கேட்டு எங்களின் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அவரால்தான் இது சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவரை நேரில் சந்தித்து இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சந்தித்து நன்றி தெரிவித்து ஆசி பெறுவேன்'' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நெல்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.