

கர்நாடகத்தில் உள்ள கௌரிபிதானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திவாகர் சென்னப்பா, பேரீச்சம் பழம் உற்பத்தியில் சாதனை படைத்துவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி ஒன்றில், தருமபுரியைச் சேர்ந்த விவசாயி நிஜாமுதினை சந்தித்தேன். அப்போது அவர் அரபு நாட்டின் தரத்துக்கு பேரீச்சம்பழங்களை நம்மாலும் விளைவிக்க முடியும் என்று சொன்னதைக் கேட்டு, ஆச்சரியம் அடைந்தேன்.
தருமபுரிக்குச் சென்று, நிஜாமுதினின் பண்ணையைப் பார்த்தேன். அவரிடம் பேசி, பேரீச்சம் பழ மரக்கன்றுகளை வளர்க்கும் முறைகளைக் கற்றேன். அவரிடம் இருந்தே நன்கு பக்குவப்பட்ட 150 மரங்களை வாங்கி வந்து, எனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட ஆரம்பித்தேன். நிஜாமுதின் தெரிவித்த முறைகளின்படி விளைச்சலைத் தொடங்கினேன். இதோடு, ஆர்கானிக் உரம் தயாரித்தும் பயன்படுத்தினேன்.
4-ஆம் ஆண்டில் முதல் அறுவடையைத் தொடங்கினேன். தொடக்கத்தில் 800 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை கிடைத்தது. தற்போது ஆண்டுக்கு 5 டன் பேரீச்சம் பழம் அறுவடையாகிறது.
இடைத்தரகர்களை நம்பாமல், நேரடியாக விற்பனை செய்கிறேன். எனது மரங்களின் சுவையை அறிந்து, பெங்களூரில் இருந்து பலரும் நேரடியாகவே கொள்முதல் செய்கின்றனர். கிலோ ரூ.310 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கிறேன்.
தற்போது என்னிடம் 135 மரங்கள்உள்ளன. இவற்றில் 15 ஆண் மரங்கள். விவசாயமாக பேரீச்சம் மரங்களை வளர்ப்பவர்கள் மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்ததத்தைச் சேகரித்து அதை பெண் மரங்களின் பூக்களின் மீது தெளித்து மகரந்தச் சேர்க்கையை செய்கின்றனர்.
விவசாயிகள் பணப் பயிரான பேரீச்சம் பழத்தைப் பயிரிட்டால் நல்ல லாபத்தைப் பெறலாம்'' என்றார் திவாகர் சென்னப்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.