

ராசு மதுரவன் இயக்கிய "முத்துக்கு முத்தாக' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பைசல். அந்த படத்தில் அவர் நட்டி நட்ராஜின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு "செங்காடு', "மூடுபனி', "அன்புடன் அழகன்', "சமனன்' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த பைசல், பட்டப்படிப்பை முடித்து விட்டு மும்பை சினிமா ஆர்ட் அகாடமியிலும், சென்னை கூத்துப்பட்டறையிலும் நடிப்பு பயிற்சி முடித்தார். அதோடு நடனம் மற்றும் சண்டை பயிற்களையும் முறையாக எடுத்துக் கொண்டு சமீபத்தில் வெளியான "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் வில்லனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் தந்தையை கொன்று அவரோடு மோதும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். தற்போது "டாடி' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
""சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது. இதற்காக முறைப்படி நடிப்பு, நடனம், சண்டை பயிற்சிகளை பெற்றேன், கல்லூரி நாள்களில் "நாற்காலிகாரன்', "அப்பா செத்த நடுக்கூடம்' உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்து என்னை மெருகேற்றிக் கொண்டேன். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து விட்டு தற்போது "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி உள்ளேன். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருகிறது. எல்லா விதமான கேரக்டர்களிலும் நடித்து "இயக்குநரின் நடிகன்' என்று பெயரை பெற விரும்புகிறேன். சினிமாக்களில் பாகுபாடு இல்லை. நல்ல சினிமாக்களில் இருக்க வேண்டும். அதுவும் அதை வெற்றிப் பெற வைக்க கூடிய முனைப்பில் உழைக்க வேண்டும்'' என்றார் பைசல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.