

திரைப்பட உலகில் பல அனுபவங்களைக் கண்டேன். பாடம் கற்றேன். அங்கே தயாரிப்பாளர்கள் படும் அவதிகள் கணக்கில் அடங்காதவை. ஒரு படத்தில் பெரிய அளவில் அடிபட்டுவிட்டார்கள் என்றால், அவர்கள் நிமிர்ந்து மீண்டும் படம் எடுக்க பல ஆண்டுகளாகும்.
பட்ஜெட் படங்களாக எடுக்கப்பட்ட சிறு கறுப்பு வெள்ளைப் படங்களும்கூட ரிலீஸ் செய்ய முடியாமலும், ரிலீஸ் செய்யும்போது லேபில் பெட்டிகளை விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கும்போது சில தயாரிப்பாளர்கள் திண்டாடியதையும் நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஒரு தயாரிப்பாளர் எல்லாப் பெட்டிகளையும் ஒப்படைத்துவிட்டு கடைசியாக சென்னையில் ரிலீஸாக வேண்டிய பெட்டிகளை காரில் ஏற்றுகிறார்.
பகல் மூன்று மணிக்கு படம் ஆரம்பம். ஒரு மணிக்கு லேப் இல் இருந்து மூன்று பெட்டிகளை ஏற்றி, திருப்திக்காக மூன்று எலுமிச்சைப் பழத்தை காரின் டயர் முன் வைத்து காரை ஸ்டார்ட் செய்யும் தருணத்தில் திடீரென்று ஒருவர் கார் முன்னால் பாய்ந்து முன் பக்க டயரை கட்டிப் பிடிக்கிறார்.
""காரை நீங்கள் கொண்டு போக முடியாது. என் பாக்கி பணம் முப்பதாயிரம் ரூபாயைத் தந்துவிட்டுதான் போக வேண்டும். அப்படி மீறிப் போவதாக இருந்தால், என் மீது கார் ஏற்றி என்னைக் கொன்றுவிட்டு போங்கள்'' என்று டயரை விடாமல் பிடித்தபடி கூறுகிறார்.
தயாரிப்பாளர் எவ்வளவோ கெஞ்சியும் அவர் மசியவில்லை. கடைசியில் விஜயா லேப் ரங்கநாதன் என்பவர், ""இன்னும் கேரளா பெட்டிகளை அனுப்பவில்லை. உங்கள் பணத்தை வசூல் செய்துகொடுத்தவுடன் தான் பெட்டியைத் தருவேன்'' என்று உறுதி அளித்தார். இதன்பிறகே அவர் டயர் போராட்டத்தை கைவிட்டு எழுந்தார்.
இந்தச் சம்பவம் சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக இந்தச் சம்பவத்தைக் கூறினேன். பணத்தைச் சரிவர ஏற்பாடு செய்துகொள்ளாமல் படம் எடுத்த அநேகம் பேருக்கு இந்த நிலைதான்!
("சித்ராலயா கோபு' எழுதிய "ஞாபகம் வருதே' என்ற நூலில் இருந்து..)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.