

சிலம்பச் சுட்டி சுகித்தாவுக்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், தீபாவளி வந்தாலே, அவருடைய கருணை முகம் மட்டுமே சாலையோரவாசிகளின் முன் வந்து நிற்கிறது.
திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தாவுக்கு, அவரது தந்தை ஆர். மோகன்தான் மானசீக குரு. தனது குழந்தைப் பருவத்தில் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றபோது, பார்த்த சிலம்பாட்டமே கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது. தாய் பிரகதாவும் மகளின் ஆசைக்கு வலு சேர்க்க, பயிற்சியாளர் உதவியுடன் சிலம்பம் கற்க தொடங்கி இன்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
இவர் தனது அண்ணன் சுஜித்துடன் இணைந்து, திருச்சி மாநகரில் காவிரி பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சென்று சாலையோரம் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட ஆதர வற்றோரைச் சந்தித்து, புத்தாடைகளை அளித்து தீபாவளி பரிசு பொருள்களையும் வழங்கினார்.
அவரிடம் பேசியபோது:
""சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு. இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தைக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.
திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில் "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே..' என்ற வரிகள் மூலம், தண்டு என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தமிழர்களின் வீரத்தையும், வரலாற்று பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை எட்டிவிட்டேன். அதில் எல்லாம் கிடைக்காத சந்தோஷமும், மகிழ்ச்சியும் சாலையோரம் வசிக்கும் மக்களின் முகங்களில் காணும் மகிழ்ச்சியில்தான் எனக்கு கிடைக்கிறது.
நாள்தோறும் பள்ளிக்குச் சென்று திரும்பும் தருணங்களில் சாலையோரம் வசிப்போரின் நிலையை அறிந்து கவலை கொண்டேன்.
அனைவரும் தீபாவளி கொண்டாடும்போது இவர்கள் மட்டும் வேடிக்கை பார்க்கும் நிலை இருப்பதை அறிந்து வேதனை அடைந்தேன். எனவேதான், சாலையோர வாசிகளும் தீபாவளி கொண்டாட என்னால் இயன்ற உதவிகள வழங்க முயன்றேன்.
முதல்கட்டமாக சிலம்பப் போட்டிகளில் கிடைக்கும் ரொக்கப் பரிசுகள், ஸ்பான்சர்கள் மூலம் கிடைக்கும் உதவிகள், எனது செலவுக்காக பெற்றோர் வழங்கும் தொகை அனைத்தையும் ஆண்டு முழுவதும் சேகரித்து, தீபாவளி வரும் மாதத்தில் அதனை பயன்படுத்தி புதுத் துணிகள், இனிப்புகள், அசைவ உணவுகளை வழங்குகிறேன். இந்தாண்டும் கூடுதலாக பணம் இருந்ததால் தீபாவளி பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கினேன்.
தீபாவளி வந்துவிட்டோலே திருச்சியில் ஆடை, அணிகலன்கள் வாங்கவும், தள்ளுபடியில் பொருள்கள் வாங்கவும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வாங்கிய புத்தாடைகளை உடுத்தி, தீபாவளி கொண்டாட கனவுகளுடன் பெரும்பாலானோர் காத்திருந்தாலும், ஆடைகளை பார்த்து ஏங்குவதும், வானில் வெடித்து சிதறும் பட்டாசு, மத்தாப்புகளைப் பார்த்து மகிழும் ஆதரவற்ற, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கத்தான் செய்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் கடந்தாண்டு சிறிய அளவிலான பங்களிப்பை அளிக்கிறேன். வேட்டி, சேலை, கைலி, குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், துண்டு என அவரவரின் தேவையறிந்து வழங்குகிறேன். எனக்கு துணையாக அண்ணன் சுஜித், பெற்றோர்களும் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். இதன் மூலம், ஆண்டுக்கு குறைந்தது 150 பேரின் முகத்தில் தீபாவளி மத்தாப்பு சிரிப்புகளை கண்டு வருகிறேன்.
தமிழ்நாடு அரசின் கலை இளமணி விருது, இடைவிடாது 8 மணி நேரம் சிலம்பம் சுற்றியதற்காக கின்னஸ் சாதனை, கௌரவ டாக்டர் பட்டம், சர்வதேச சிலம்பப் போட்டிகளில் பதக்கங்கள், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிங்கை சிலம்ப தங்க மங்கை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னோடி பெண்மணி விருது, சிலம்பச் சாதனை நாயகி விருது என்று பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.