இந்தியாவின் பெருமை

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்(150 ஆண்டுகள்) இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம். 
இந்தியாவின் பெருமை
Updated on
3 min read

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்(150 ஆண்டுகள்) இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம். 1799 இல் திப்பு சுல்தானை வீழ்த்தி, தென் இந்தியாவில் தங்களின் இருப்பை உறுதி செய்து கொண்ட ஆங்கிலேயர்கள் பிரிட்டனின் காலநிலையைப் போன்ற இடத்தைத் தேடி வந்தனர். 1818 இல் கோவையின் ஆட்சியராக இருந்த ஜான் சலீவன், மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோவுக்கு எழுதிய கடிதத்தில், ஐரோப்பாவைப் போன்ற காலநிலை உதகையில் இருப்பதால், அதை கோடைக்காலத் தலைநகராக மாற்றிக் கொள்ளலாம் என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

திப்புவின் காலத்தில் உதகைக்குச் செல்ல வேண்டுமானால் பெங்களூரில் இருந்து வரக்கூடிய பாதை மட்டுமே ஒரே போக்குவரத்து வசதியாக இருந்தது. உதகை, குன்னூரைப் பற்றி அறிந்த ஆங்கிலேயர்கள், அங்கு எளிதில் செல்வதற்கான வசதிகளை செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

இதையடுத்து குன்னூர் வழியாக மலைப்பாதை அமைக்கப்பட்டதும் குதிரைகள், மாடுகள் மூலம் போக்குவரத்து நடைபெற்று வந்தது. 1853இல் தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகேயுள்ள ராயபுரத்தில் இருந்து ஆற்காட்டுக்கு அமைக்கும் பணி தொடங்கியது.

1856 இல் ராயபுரத்தில் இருந்து வாலாஜா, திருவள்ளூருக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அது சேலம், கோவை வழியாக கேரளத்துக்கும் நீட்டிக்கப்பட்டது. 1861இல் கோவை ரயில் நிலையம் (அப்போது போத்தனூர்) கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் போத்தனூருக்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து உதகை சென்று வரத் தொடங்கினர்.

இதனால் போத்தனூர் நகரில் ஆங்கிலேயர்களின் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் போத்தனூரில் இருந்து உதகைக்குச் செல்ல 3 நாள்களாகும். முதல் நாளில் போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரையும், 2 ஆவது நாளில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையும், 3ஆவது நாளில் குன்னூரில் இருந்து உதகைக்கும் சென்றடைந்தனர்.

தென் இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் ரயிலான புளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ், போத்தனூரில் இருந்து ராயபுரத்துக்கு 1864 முதல் இயங்கத் தொடங்கியது. இதற்கிடையே உதகை நகரின் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்ததால், அதன் அடிவாரமான மேட்டுப்பாளையம் வரையிலும் ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக 1873ஆம் ஆண்டு பிப்ரவரியில் தற்போதைய கோவை ரயில் நிலையமும், ஆகஸ்ட் 31இல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையமும் திறக்கப்பட்டன. இதனால் உதகைக்குச் செல்லும் நேரம் 3 நாளில் இருந்து ஒன்றரை நாளாகக் குறைந்தது.

மேலும், குன்னூர் வரை செல்வதற்கான திட்டம் முன்பே இருந்ததால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே அடர்ந்த வனப் பகுதிகளில் இருந்த பெரிய பாறைகளைக் குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து 1908ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் மேட்டுப்பாளையம்தான் உதகையில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்களுக்கு மளிகை, இதர பொருள்கள் வாங்குவதற்கான அங்காடியாகத் திகழ்ந்தது. இதனால் உதகை மலையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் 3 பயணிகள் மற்றும் 3 சரக்கு ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இந்த ரயில்களில் மலையில் இருந்து பசுந்தேயிலையும், மலைப் பொருள்களும் கொண்டு வரப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் இருந்து மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உதகை மலைக்குச் சென்றன. இன்று சாலை வசதி விரிவாக்கப்பட்டதால் மலைப் பகுதிகளில் விளையும் பொருள்கள் யாவும் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் வந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பல் சக்கரப் பாதை கொண்ட மலை ரயிலில் பயணிப்பதற்காக இன்றும் காலை 7 மணிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் திரளுவது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் தனிச்சிறப்பு.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று 150 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மேட்டுப்பாளையம் ரயில் நிலையம். இன்று மேட்டுப்பாளையத்துக்கு 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு மலை ரயில், 5 புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென் இந்தியாவில் மீட்டர் கேஜ், பிராட் கேஜ் பாதைகள் இருக்கும் ஒரே ரயில் நிலையம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மட்டுமே. டீசல், மெமு, எலெக்ட்ரிக், நீராவி என 4 வகையான ரயில்கள் இயக்கப்படும் ஒரே ரயில் நிலையம் நாட்டிலேயே மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மட்டும்தான்.

உலகிலேயே நீராவி என்ஜின், நிலக்கரி பிராட்கேஜ் என்ஜின், நிலக்கரி மீட்டர் கேஜ், மெமோ என்ஜின், டீசல் என்ஜின், எலெக்ட்ரிக் என்ஜின், மீட்டர் கேஜ், ரயில் பஸ் உள்ளிட்ட 10 வித்தியாசமான ரயில் என்ஜின்கள் இயக்கப்பட்ட ஒரே ரயில் நிலையமும் மேட்டுப்பாளையம்தான்.

இதேபோல ஹைட்ரஜன் என்ஜின் இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு மார்க்கம் மேட்டுப்பாளையம்குன்னூர் ரயில் பாதைதான். உலகிலேயே ஜெர்மனி, சீனா, இந்தியா ஆகியே 3 நாடுகளிடம் மட்டும்தான் ஹைட்ரஜன் என்ஜின்கள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின்போது உதகையின் பசுந்தேயிலையை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்காக உதகையில் இருந்து கொச்சி வரை டீ கார்டன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தனியாக ரயில் இயக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலேயத் துருப்புகள், அவர்களின் குடும்பத்தினர் வசதிக்காக பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து கேரளத்தின் கண்ணூர் வரை இயக்கப்பட்டு வந்த ராணுவ சிறப்பு ரயிலான கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், 1929 ஆம் ஆண்டுகளில் சில காலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டதும் இதன் பெருமைகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com