திரை ஆளுமை: வஹீதாவுக்கு பால்கே!

ஹிந்திப் படவுலகில் தமிழ் நடிகைகளுக்கு முன்னோடி வைஜந்திமாலா. இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வஹீதா ரஹ்மான், வைஜந்திமாலாவைவிட ஐந்து வயது சிறியவர்.
திரை ஆளுமை: வஹீதாவுக்கு பால்கே!
Updated on
2 min read

ஹிந்திப் படவுலகில் தமிழ் நடிகைகளுக்கு முன்னோடி வைஜந்திமாலா. இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வஹீதா ரஹ்மான், வைஜந்திமாலாவைவிட ஐந்து வயது சிறியவர்.

புகழில் இருவரும் ஏறக்குறைய சமமானவர்கள்தான். விருதுகளில் பத்மஸ்ரீயுடன் வைஜந்திமாலா நின்றுவிட, வஹீதா பத்மபூஷண் விருதையும் பெற்றார். இப்போது "தாதா சாஹேப் பால்கே' விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

வஹீதாவின் தந்தை ரஹ்மானின் பூர்விகம் வட மாநிலம் என்றாலும், பணிநிமித்தமாகச் சென்னைக்கு வந்தவர். மாவட்ட அளவில் உயர்பதவிகளில் பணிபுரிந்திருக்கிறார். தாய் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட வலங்கைமானைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரது தந்தை செங்கல்பட்டில் பணிபுரிந்தபோது கடைக் குட்டியாக வஹீதா பிறந்தார். வஹீதாவுக்கு மூன்று சகோதரிகள்.

வஹீதாவின் தந்தை இசைப் பிரியர் என்பதால், மகள்களை நடன வகுப்புகளில் சேர்த்துவிட்டார். வஹீதாவை அழகும் நளினமும் பிறரைக் கவர்ந்தது.

பள்ளி படிப்பு முடிந்ததும் மருத்துவராகும் கனவில் இருந்த வஹீதாவின் எதிர்காலத்தை புரட்டிப் போட்டது தந்தையின் திடீர் மரணம். தொடர்ந்து தாயும் விடை பெற, கல்வியைத் தொடர முடியவில்லை.

1956இல் இயக்குநர் கிருஷ்ணசாமி இயக்கிய "ஒன்றே குலம்' என்ற படத்தில் வஹீதா நர்ஸ் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்குப் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் "ஸலாம் பாபு ஸலாம் பாபு என்னைப் பாருங்க' பாடலில் பானுமதியுடன் ஆடும் பெண்களில் ஒருவராக வஹீதாவும் நடித்தார். ஜெமினி கணேசன் நடித்த "காலம் மாறிப்போச்சு' என்ற படத்திலும் வஹீதா நடித்துள்ளார்.

முதல் படமான "ரோஜுலு மராயி' யில் நாட்டுப்புற நடனப் பாடலில் வஹீதா அருமையாக ஆடியிருந்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற வெற்றிவிழாவில், வஹீதாவைப் பற்றி அறிந்த பிரபல ஹிந்தி நடிகர் குரு தத் மும்பைக்கு வரச் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் நடிகர், நடிகைகள் இந்துப் பெயரை வைத்துக் கொள்வார்கள். முகம்மது யூசுப்கான் தன்னை திலீப்குமார் என்று மாற்றிக் கொண்டார். மும்தாஜ் ஜஹான் பேகம் "மதுபாலா' ஆனார். மஹ்ஜாபீன் பானு என்பவர் "மீனா குமாரி'யானார். ஆனால், வஹீதா ரஹ்மானோ தனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.

வஹீதாவுக்கு, "சிஐடி " படத்தில் வில்லி வேடம் அளித்து குரு தத் நடிக்க வைத்தார். வஹீதாவின் நடிப்பில் உச்சம் தொடுவார் என்ற நம்பிக்கை குரு தத்துக்கு வர, தனது அடுத்த படமான "பியாஸா" படத்தில் இரண்டாம் நாயகியாக நடிக்க வைக்க, அதுவும் பிரமாதமான வெற்றி பெற்றது.

"சாஹிப் பீபி அவுர் குலாம்' பட வெற்றிக்குப் பின்னர் இந்த ஜோடி பிரிந்தது. வஹீதா இதர நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். வஹீதா ரஹ்மானும் சத்யஜித் ரேயின் பெங்காலி திரைப்படமான அபிஜானில் நடித்திருந்தார்.

வஹீதா சக நடிகர் கமல்ஜீத்தை 1974இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவரும் எழுத்தாளர்கள்.

வஹீதாவுக்கு படம் பிடிப்பதில் நடிக்கும் போதே ஆர்வம் இருந்தது. ஹிமான்சு சேத் என்ற புகைப்படக் கலைஞரிடம் பயின்று, புகைப்படக் கண்காட்சி நடத்தும் அளவுக்கு வஹீதா உயர்ந்தார். தான் எடுத்த படங்களைக் கொண்டு, புகைப்படக் கண்காட்சி நடத்திய நடிகை வஹீதா மட்டும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com