ஆட்டுக்கல் மழைமானி..!

அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளிலும் ஆட்டுக்கல் திறந்தவெளியில், முற்றத்தில் இருக்கும். அது மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல; மழைமானியும் கூட!
ஆட்டுக்கல்
ஆட்டுக்கல்
Updated on
1 min read

அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளிலும் ஆட்டுக்கல் திறந்தவெளியில், முற்றத்தில் இருக்கும். அது மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல; மழைமானியும் கூட!

முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்த நீரை விரலால் அளந்து பார்த்து அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரு உழவுக்கு ஏற்ற மழையா என்பதை முன்னோர்கள் அறிவார்கள்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதிவு எனப்படும். இது பத்து மில்லி மீட்டர் அல்லது ஒரு சென்டி மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் ஈர பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை 'பதினை' என்றனர். அறிவியல் கணக்கின்படி, 18 மில்லி மீட்டர் வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சி கொள்ளும்.ஆக, எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்து கொண்டு முதல் உழவுக்குத் தயார் ஆவார்கள்.

மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தூறல்- பசும்புல் மட்டுமே நனைவது, விரைவில் உலர்ந்து விடும்.

சாரல்- தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை- ஓடையில் நீர் பெருக்கு இருக்கும்

பெருமழை- நீர்நிலைகள் நிரம்பும்.

அடை மழை- ஐப்பசியில் பெய்வது

கனமழை- கார்த்திகையில் பெய்வது.

இதையே அறிவியல் வேறு வகையில் கூறுகிறது. அதாவது, மழை துளியின் விட்டம் 0.5 மில்லி மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல். அதுவே விட்டம் 0.5 மில்லி மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை. நான்கு முதல் ஆறு மில்லி மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும். மழையைப் பற்றி திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறா நீர் என் குறிப்பிட்டிருக்கிறார் .

பொதுவாக, ஊர்ப் புறங்களில் மிக அதிகமாக ஐந்து சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தால் ஓர் உழவு மழை என சொல்வது உண்டு. பூமியில் ஓரடி ஆழத்துக்கு தண்ணீர் இறங்கியிருந்தால் அது ஓர் உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.

உரல் குழி மழைநீரால் நிரம்பி இருந்தால் அது ஓர் உழவு முறையாகும். அதாவது பெய்து முடித்த மழையானது உழவு செய்து விதைக்கப் போதுமானதாகும் என்று பொருள். ஏர் கலப்பையைக் கொண்டு இலகுவாக மண்ணில் ஓரடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும்போது ஏர்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.

மழையின் அளவைப் பொறுத்து ஈருழவோ ஐந்து உழவோ பத்து உழவோ என கணக்கிடுவார்கள். ஐந்து உழவுக்கு மேல் மழை பெய்தால் நதிகளில் நீர் கரை புரண்டு நகரும். படிப்பறிவு இல்லாமல் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்த அனுபவ அறிவு இதுவாகும்.

ஆட்டுக்கல்லே அந்த காலத்தில் மழைமானியாக பயன்பட்டிருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com