இளைஞர்களிடம் பெரும் மாற்றத்தை இந்தப் படம் உருவாக்கும். இந்த சமூகத்தில் நடந்துக் கொண்டு இருக்கிற எல்லா நடப்புகளையும் இது விவாதிக்கும். நடந்து வந்த பாதையை, கடந்துபோனதை, பார்த்தும் பார்க்காமல் போனதை, பார்க்க மறந்து போனதை எல்லாம் சேர்த்தே பேசியிருக்கிறோம்.
தேனி, பெரியகுளம், கேரள மாநிலத்தில் உள்ள மாஹே சுற்று வட்டாரத்தில் நடக்கிற கதை. சாதியின் அம்சங்கள் குறித்தும் சார்ந்தும் இருக்கிற கதைக்கரு. அதிலிருந்து மனித உணர்வுகள், மதிப்பீடுகள் என்று வெளியே கொண்டு வந்திருக்கிறேன்.
மனிதர்களை பிரித்து வைக்கிறசாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு உண்மையை விவாதித்தோம். அதில் சினிமாவுக்கு ஏற்ற சங்கதிகள் நுழைத்து வைத்திருக்கிறோம்.
இங்கே இருக்கிற அத்தனை பேருமே இந்தக் கதையை இனம் காண முடியும்.'நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சிவப்பிரகாஷ். பாலுமகேந்திராவின் பயிற்சி பட்டறையில் பயின்றவர். இப்போது “பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் இயக்குநர்.
சாதிய கட்டமைப்புகள் இன்னும் ஊடுருவியிருப்பதை படம் பிடிக்கிற விதமாகவா...
மனிதர்களைச் சார்ந்து மட்டுமே நம்மால் வாழ முடியாது. மாடு, ஆடு, நாய், பூனை என்று பல ஜீவராசிகளோடு இணைந்ததுதான் மனித வாழ்வு. ஜீவராசிகளின்மீது பெரும் காதல் கொண்டவர்களாகவும் அன்பு கொண்டவர்களாகவும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். பல நேரங்களில் அவற்றுடன் பேசுகிறார்கள்.
மனிதனுக்கும் அவனின் வளர்ப்புப் பிராணிக்கும் இடையில் இருக்கிற சங்கேத மொழி யாராலும் புரிந்து கொள்ள முடியாதது. பல தருணங்களில் பிள்ளைகளால் கைவிடப்படுகின்ற முதியோர்கள் அல்லது குடும்பத்தில் நிராகரிக்கப்படுகின்ற மனிதர்களுக்கு இந்த வளர்ப்புப் பிராணிகளே பெருந்துணையாக இருக்கின்றன.
ஆனால் மனித காதல் என வருகிறபோது சக ஆணை, பெண்ணை நேசிக்கிற போது வருகிற பிரச்னை பெரிது. சமூகம் ஏற்று கொள்ள மறுத்து ஆணவக் கொலை வரை செல்கிற மன நிலை வந்து விடுகிறது. இதெல்லாம் சேர்த்ததுதான் கதை.
அது என்ன கதை...
நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள்.
மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது.
ஏதோ ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோருமே.ஊரும், சாதிய கட்டமைப்புகளும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சமூகத்தின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. இது வழியாகவும் கதை இருக்கும். . அதை சினிமாவுக்கு தக்கவாறு மாற்றி படைத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு ஒரு உத்வேக கதை.
சமரசங்கள் இல்லாமல் இந்த கதைக்கு முழு வடிவம் கொடுத்திருக்க முடியாது....
நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம்.நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம்.வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான்.
ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம்.
சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம். எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம் என்றார் வினோபா பாவே.அது எத்தனை பெரிய உண்மை.
இளையராஜா இசை... தங்கர்பச்சான் மகன் அறிமுகம்...
நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார்.
இனி என்ன இருக்கிறது... இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். இந்தத் தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை.அவ்வளவு இலகுவாகக் கைக்கு வந்திருக்கிறது.
இந்தப் படத்தின் பலமே ராஜா சாரின் இசைதான்.ராஜா சாரின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது. இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது. இயக்குநர் தங்கர்பச்சான் சாரின் மகன்தான் விஜித் பச்சான் ஹீரோ.
பெரிய முன் ஏற்பாடுகள், திட்டங்கள் இல்லை. எல்லாம் தாமாகவே நடந்து வந்தது. ஏற்கெனவே அவர் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க இருந்தது. ஏதோ முடியவில்லை. கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எல்லாம் சரியாக நடந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இருக்கும்.