/

சவாலே சமாளி...

'எனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் வலிமையானது; அதுவே என்னை கலைஞனாக மாற்றியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:34 pm

மு. சர்க்கரை முனியசாமி

'எனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் வலிமையானது; அதுவே என்னை கலைஞனாக மாற்றியது. கலை மீது உள்ள அன்பும், விடாமுயற்சியும்தான் என்னை உயர்த்தியது. வாழ்க்கை என்னை சோதித்தது, ஆனால், கலை என்னை மீண்டும் எழுப்பியது' என்கிறார் சாதனை ஓவியர் மணிகண்டன்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சேர்ந்த இருபத்தேழு வயதான மணிகண்டனிடம் பேசியபோது:

'நான் சிறுவயது முதல் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் வரைவேன். வாழ்க்கையின் கடினமான தருணங்களையும், அதே வண்ணங்களால் வெல்ல முயன்று, பொருளாதார சிக்கல்களுடன், எனது தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தேன்.

எனது ஓவியங்கள் வெறும் படங்களல்ல; அவை உள்ளத்தின் பிரதிபலிப்பாகும். கிராமத்து வாழ்க்கை, பாரம்பரியம், ஆன்மிகம் உள்ளிட்டவற்றில் எனது படைப்புகள் உயிர் பெற்றுள்ளன.

Story image

தஞ்சாவூர் ஓவியம், எண்ணெய் ஓவியம், வண்ண ஓவியம் போன்றவற்றை தனித்துவமாக வரைவேன். நான் வரைந்த ஐயப்பன் ஓவியம் பார்ப்பவர்களுக்கு ஓர் ஆன்மிகச் சிந்தனையை உணர்த்தும். ஐயப்பனின் தெய்விக முகபாவனை, கண்களில் தெரியும் கருணை, நுணுக்கமான வேலைப்பாடு ஆகியன அந்த ஓவியத்தை ஓர் உயிருள்ள படைப்பாக மாற்றியுள்ளன.

தமிழ்நாடு அரசின் பதிவு செய்யப்பட்ட கலைஞராகியுள்ள நான் கலைப் பண்பாட்டு துறையில் வழங்கிய சிறந்த ஓவியருக்கான 'கலைவளர்மணி' பட்டம், 'பூம்புகார்' மாவட்ட கலைவிருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். எனது கலைப்பயணம் இந்திய அளவில் பேசப்பட வேண்டும் என்பதே இலக்கு.

எண்ம உலகிலும், ஐ-பேடு மூலம் எண்ம ஓவியங்களை உருவாக்கி, பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்' என்கிறார் மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.