தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

சுவை தேடல் தொழில் ஆனது!

உணவுத் தொழிலைப் புதியதாகக் கற்ற அகில் ஐயர், ஸ்ரியா நாராயண் ஆகிய இருவரும் பெங்களூரின் சுவையில் தோசை, இட்லிகளைத் தயாரித்து மும்பை பாந்த்ராவில் 'பென்னே' என்ற உணவகத்தைத் தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 7:28 pm IST

உணவுத் தொழிலைப் புதியதாகக் கற்ற அகில் ஐயர், ஸ்ரியா நாராயண் ஆகிய இருவரும் பெங்களூரின் சுவையில் தோசை, இட்லிகளைத் தயாரித்து மும்பை பாந்த்ராவில் 'பென்னே' என்ற உணவகத்தைத் தொடங்கியுள்ளனர்.

பல மாதங்கள் சோதனைகளுக்குப் பின்னர் பாரம்பரிய முறையில் உணவுகளைத் தயாரித்து விற்பனையில் சாதனை படைத்துள்ள அகில் ஐயர் கூறியது:

'திருமணத்துக்குப் பின்னர், குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தோம். சொந்த ஊரான பெங்களூரின் பரிச்சயமான உணர்வை இழந்ததாக உணர்ந்தோம். குழந்தைப் பருவத்தை நினைவூட்டும், வெண்ணெய் தடவிய 'தாவண்கெரே' பாணி சூடான தோசையைத் தேடி மும்பை முழுவதும் அலைந்தும் கிடைக்கவில்லை.

'தாவண்கெரே' சுவையில்லாமல் மும்பையின் சாதாரண தோசைகளை எத்தனை நாள் சாப்பிடுவது? அவற்றைத் தயாரிக்க முடிவு செய்தோம். ஹோட்டல் தொழிலில், தோசை சுடுவதில் முன் அனுபவம் இல்லாத நிலையில், நல்ல ஊதியம் தரும் வேலைகளை விட்டுவிட்டு உணவுத் தொழிலில் இறங்கினோம். பாந்த்ராவில் 12 பேர் அமரும் வசதி கொண்ட சிறிய உணவகத்தைத் தொடங்கினோம்.

'தாவண்கெரே' சுவையுள்ள தோசையை அதே பதத்துடன் உருவாக்குவது ஒரே நாளில் சாத்தியம் ஆகவில்லை. பொருத்தமான மாவுக் கலவை தயாரிப்பதற்கே பல மாதங்கள் தேவைப்பட்டன. சட்னி தயாரிக்கும் முயற்சியிலும் தொடர் தோல்விகளைச் சந்தித்தோம். விரும்பிய சுவை கிடைக்கும் வரை தொடர்ந்து எங்கள் தயாரிப்பு முறைகளை மேம்படுத்திக் கொண்டே இருந்தோம். பாரம்பரிய தயாரிப்பு முறையை அப்படியே பின்பற்றுவதற்காக, கர்நாடகாவிலிருந்து வார்ப்பிரும்பு தோசைக் கல்லையும் வரவழைத்தோம்.

குறைந்த முதலீடு, கவனமாகத் திட்டமிடுதல் மூலமாக நாங்கள் உணவகத்தைப் படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் நகர்த்தினோம். தோசை வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்க வேண்டும் என்ற லட்சியம் கடைசியில் நிறைவேறியது.

தாராளமாக வெண்ணெய் சேர்க்கப்பட்ட உண்மையான தாவண்கெரே பாணி 'பென்னே தோசை' (வெண்ணெய் தோசை) பாந்த்ரா மக்களை ஈர்க்கத் தொடங்கியது.

பல வாடிக்கையாளர்களுக்குக் குடும்பச் சமையலறைகள், சொந்த ஊர்கள், பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் உணவகமாக 'பென்னே' மாறியது. 'பென்னே தோசை' எங்கள் உணவகத்தின் அடையாளமாகவும் மாறியது.

இன்று, எங்கள் உணவகம் தினமும் 800-க்கும் மேற்பட்ட தோசைகளைத் தயாரித்து விற்கிறது. மாதத்துக்கு ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு எங்கள் உணவகத் தொழில் மாறியுள்ளது.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா எங்கள் உணவகத்துக்கு வருகை தந்தபோது, உணவகம் மக்களின் பரவலான கவனத்தைப் பெற்றது. தோசையை உண்டவுடன் தனது குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டெடுத்ததாக அனுஷ்கா எங்களிடம் கூறியபோது மகிழ்ந்தோம்' என்கிறார் அகில் ஐயர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.