முன்பெல்லாம் மெட்ராஸ்' என்றால்தான் அனைவருக்கும் தெரியும். சென்னை' என்பது அப்போது சரிவர புழக்கத்தில் இல்லை. சென்னையில் முக்கியமான இடங்களில் மூர் மார்க்கெட்டும் ஒன்று. இந்த மார்க்கெட் இந்தோ- சாரசானிக் கட்டடப் பாணியில் கட்டப்பட்டதாகும். அதன் அழகைச் சொல்லி மாளாது.
நுழைவாயிலில் கருங்கற்களாலான வளைவுகளும், கூரை, கைப்பிடிச் சுவர்களில் இடம்விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கவசங்களும் இருந்தன. இன்று அல்லிக்குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர் மார்க்கெட்டின் சுவர்களில் மேற்கூறிய கற்கள் பத்திரப்படுத்தப்பட்டிருப்பதோடு, பொருத்தப்பட்டுள்ளன.
அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டில் அனைத்து வகையான பொருள்களும் கிடைக்கும். புதிய பொருள்களும் கிடைக்கும். அபூர்வ பேனாக்களும் கிடைக்கும். அந்தக் காலத்து அனுமான்', காண்டீபம்', நாரதர்' போன்ற இதழ்களின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்புகளும் அங்கே அக்காலத்தில் கிடைத்தது.
மூர் மார்க்கெட் பழைய நூல்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவற்றோடு இன்னொரு முக்கிய விஷயத்துக்கும் பெயர் போனது. பழைய கிராம போன் இசைத்தட்டுகள், அனைத்து மொழிகளிலும் வெளியான சாதாரண இசைத்தட்டுகள் முதல் எல்.பி. ரெக்கார்டுகள் வரையும்; கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களின் இசைத்தட்டுகளும் இங்கு கிடைக்கும். ஆங்கிலோ- இந்தியக் குடும்பங்கள் மேனாட்டு இசைத்தட்டுகளை வாங்கவும், விற்கவும் எப்போதும் அலையும் இடம்தான் மூர் மார்க்கெட்.
நம்மிடம் உள்ள இசைத்தட்டுகளை அளித்துவிட்டு, அவற்றுக்குப் பதில் நாம் வேறு இசைத்தட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். கூடுதலாக சொற்பத் தொகையே தர வேண்டியிருக்கும். கேட்டு அனுபவித்துவிட்டு இங்கேயே கொண்டுவந்து கொடுத்துவிட்டு, வேறு எதுவேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
மூர்மார்க்கெட் வளாகத்தில் இரண்டு விதமான புத்தக விற்பனை இருக்கும். ஒன்று நிரந்தரக் கடைகள். இந்தக் கடையில் உள்நாட்டு, வெளிநாட்டு நூல்கள் பைண்டிங் செய்யப்பட்டு, கண்ணாடி பீரோக்களில் இருக்கும். சாதாரண பேப்பர் பேக்ஸ் வகை நூல்கள் வெளியே அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இதே கடையில் பழக்கம், நம்பிக்கை மேலிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு, நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இன்னொரு வகை விற்பனையாளர்களான சாலையோரக் கடை வியாபாரிகள், மூர்மார்க்கெட்டின் வெளிப்புறங்களில் பல ஆண்டுகளாக நிரந்தரமாகக் கடைகளை வைத்திருப்போர் தயவில் கடை வைத்திருப்பவர்கள்.
(எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதிய வாழ்வில் சில உன்னதங்கள்' எனும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








