பாரதியார் நடத்திய பட்டி மண்டபம்

1917-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆவது வாரம். திங்கள்கிழமை மாலையில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்தக் கட்டுரைக்கான களம். தனக்கு, காளிதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டு "செய்கை
பாரதியார் நடத்திய பட்டி மண்டபம்
Updated on
2 min read

1917-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆவது வாரம். திங்கள்கிழமை மாலையில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்தக் கட்டுரைக்கான களம்.

தனக்கு, காளிதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டு "செய்கை' என்னும் கதை புனைந்த பாரதி, புதுச்சேரியை, வேதபுரம் என்று சுட்டி கதை தொடங்குகிறார்: ""வேதபுரத்தில் வேதபுரீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன்'' என வளர்கிறது கதை.

அதுசமயம், அக்கோயிலுக்கு வந்திருந்த பாரதியின் நண்பர் பிரமராய ஐயர், அக்கோயிலின் தர்மகர்த்தா, வீரப்பமுதலியார் ஆகியோருடன் பாரதியும் அக்கோயில் திருக்குளத்தில் அமர்ந்து பொதுவாகப் பேசத்தொடங்குகின்றார்.

""அப்போது, கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டுவந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காயிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்யாசத்துக்கு எல்லாரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்ற அழைப்புக் காயிதம். அந்தக்காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின்வருமாறு:

தோகைமேல் உலவும் கந்தன்

சுடர்க்கரத்திருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை

வணங்குவ தெமக்கு வேலை

(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றிமாலை சூடிநிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே எம்முடைய தொழில்)

இவ்விரண்டு பதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய ஐயர் நல்ல பாட்டு என்றார். பின்னர், இப்பாடலை முன்வைத்து ஒரு பட்டிமண்டபமே நடத்திவிடுகிறார் பாரதியார்.

முதல்உரை - வீரப்பமுதலியார்:- ""கேளும் காளிதாசரே, பிரமராயரே நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத்தவிர, நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப்போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கின்றார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலே நமக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் - எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான்; வேலை செய்யாதவன் செத்துப்போவான்''.

மறுப்பவர் } பிரமராய ஐயர்:- ""சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்திரமாகக் காட்டித் தன்னுடைய சோம்பரை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள். இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையாலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறாள். இது மறுக்கமுடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி. இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும், தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்கினியைப்போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்தச் சக்திகளைக்கண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிடமுடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்... ""தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன்பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல்போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா, வில்லினை எடடா, கையில் வில்லினை யெடடா(பாடுகிறார்)'' என்று பகவான் சொல்லுகிறார். ஆதலால், பக்தனுக்குத் தொழிலிலே பொறுப்பில்லை. ஆனால், தொழில் உண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தியுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லையென்று உதறிவிட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக்கொண்டு மகத்தான செய்கைகளைச்

செய்வான்.

வீரப்ப முதலியார் (காளிதாசனை நோக்கி) ""உமது கருத்தென்ன?''

காளிதாசன்:- ""எனக்கென செயல் யாதொன்றுமில்லை என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என்மூலமாக ஏது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமேயன்றி என்னுடைய இஷ்டமில்லை''.

இதன் வாயிலாக பாரதியார் சொல்லவருவது யாது? இதற்கு, செய்கை என்ற கதைத்தலைப்பே பதில். புரியவில்லையெனில், பராசக்தி என்ற பாரதியின் கவிதையைப் படிக்கலாம்.

""நாட்டுமக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மேனிலை எய்தவும்'' என வருகிறது அக்கவிதை. அது பாரதியின் கவிதைதான் ஆனால், இக்கதையில் வருகிற, எமக்கு வேலை என்னும் கவிதை, பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், உண்மையில் பாரதி எழுதியது இல்லை. சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்திபுராணத்தில் இடம்பெறும்,

""ஓகையால் திரைமுன் னாளில்

உழக்கும்மாவினையால் வாட்டும் ''

- என்ற அடிகளைத் தொடர்ந்து வருவதாகும். இவ்வுண்மையை, பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் தொடர்ந்து வலியுறுத்திவந்தபோதும் பலரும் கவனிக்கத் தவறியிருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com