தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

திருக்குறளில் "அவர்'!

அவர்' எனும் சொல் மரியாதையின் பாற்பட்டு ஒருவரைச் சுட்டும் சொல்லாக வழங்குகிறது. "அவர்' என்னும் சொல், வள்ளுவரின் குறட்பாக்களில் பயின்று வரும் இடங்கள் அகப்பொருளாகக் கையாளப்பட்டிருக்கும் உயர்ந்த பண்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலில் "அவர்' என்னும் சொல் நயம் சொல்லப்பட்டிருக்கும் விதத்தைக் காண்போம்.

News image
Updated On :5 மே 2013, 1:31 am IST

அவர்' எனும் சொல் மரியாதையின் பாற்பட்டு ஒருவரைச் சுட்டும் சொல்லாக வழங்குகிறது. "அவர்' என்னும் சொல், வள்ளுவரின் குறட்பாக்களில் பயின்று வரும் இடங்கள் அகப்பொருளாகக் கையாளப்பட்டிருக்கும் உயர்ந்த பண்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலில் "அவர்' என்னும் சொல் நயம் சொல்லப்பட்டிருக்கும் விதத்தைக் காண்போம்.

காமத்துப்பாலில் முதல் நான்கு அதிகாரங்களில், தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொண்டபோதும் தலைவி தன் வாய்திறந்து எந்தச் சொல்லும் சொல்லாது நிற்கிறாள். ஐந்தாவது அதிகாரத்தில்தான் ""நுண்ணியர் எங்காதலவர்'', ""கண்ணுள்ளார் காதலவர்'', நெஞ்சத்தால் காதலவர்'' என்றெல்லாம் முதன் முதலாகக் காதலனைப் பற்றி சொல்லும்போது, "அவர்' எனக் குறிப்பிட்டு அழைக்கிறாள். வள்ளுவரின் இந்தத் தலைவியின் பண்புச் செயல் இலக்கிய வகையில் "களவியலில்' அடங்கும்.

கற்பியலிலும் ""இன்கண் உடைத்தவர் பார்வல்'', ""அரிதவர் நல்குவர் என்னும் நகை'', ""அவர்க் காணாது அமைவிலகண்'', ""அவர் தந்தார்'', ""அவர் கொண்டார்'', ""உரைப்பது அவர் திறம்'', ""துறந்தார் அவர்'', ""அவர் நெஞ்சத்து'', ""அவரொடுயான்'', ""நல்காதலர்'', ""காதல் அவரிவர்'', ""அவர்க் காணலுற்று'' என்று பலவாறான சொற்களில் தலைவி தலைவனை "அவர்' என்றே குறிப்பிடுகிறாள்.

தலைவனை அண்மை, சேய்மை ஆகிய இரு இடங்களிலும் தலைவி "அவர்' என்றே குறிப்பிட்டுள்ளபடியால் "அவர்' என்பதை அவள் சுட்டுப்பெயராக மட்டும் கொள்ளாது தனக்கே உரிமையுள்ள பெயராகக் கருதியே கூறுவதாக வள்ளுவர் காட்டியுள்ளார்.

தன் இணைபிரியாத் தோழிகூட தலைவனை "அவர்' எனச் சுட்டிட அனுமதிக்கவில்லை. தனக்குச் சொந்தமான தலைவனை "அவர்' என்று சுட்டி, அவ்வுரிமையைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்கிறாள் தலைவி.

"அவர் வயின் விதும்பல்' என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள "அவர்' பற்றி உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பரிமேலழகர் "அவர்' பற்றி கீழ்வருமாறு விளக்கம் தந்துள்ளார்.

""அஃதாவது சேயிடைப் பிரிவின்கண் தலை மகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை ஒருவர் காண்டற்கு விரைதல், தலைமகன் பிரிவும் தலைமகளாற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலால் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைத்து தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருள் உணர்த்துவதல்லது தான் ஒன்றற்குப் பெயர் ஆகாமையானும் கவிக் கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையால் கூறப்படாமையானும் அஃது உரையின்மை அறிக. இதனுள் தலைமகன் கூற்று நிறையழிவான் நிகழ்ந்ததாகலின் அவ்வியைபு பற்றி நிறையழிதலின் பின் வைக்கப்பட்டது'' என "அவர்' என்பது பன்மைப்பெயரால் இருவரையும் சுட்டிற்று என்பார்.

பரிமேலழகர் கருத்துப்படி "அவர்' என்பது "ஊரவர்' எனப் பன்மைப்பெயராய் தலைவியாலேயே காமத்துப்பாலில் இரண்டு இடங்களில் பேசுவதாகக் கையாளப்பட்டுள்ளது.

"அவர் வயின் விதும்பலானது, ""அவர் வாவின் கண்ணே விரைதல்'', ""காதலர் வரவு கேட்டு இருத்தல்'' என்றவாறு தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் எப்பொழுதும் காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பர் ஆதலான், அதன்பின் இது கூறப்பட்டது'' என, "அவர்' என்பது "அவனையே குறிக்கும்'' எனக் கூறுகிறார் ஓர் உரையாசிரியர்.

இவர்கள் கருத்துகளுக்கு அணியாக "அவர்' என்பது தலைவனைக் குறிக்கவே தலைவியால் பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. தலைவனைப் பிரிந்த தலைமகள் தன் பிரிவாற்றாமை நோய் பற்றி தோழியிடம் பேசுவதாக வள்ளுவர் "அவர் வயின் விதும்பல்' (127-1, 9) அதிகாரத்தில் கூறியுள்ளார். இவ்வாறு தலைவனைப் பிரிந்த துன்பத்திலிருக்கும் தலைவியினது உள்ள நிலைமையை தலைவி, தோழிக்கு தன் வாய்மொழியாகக் கூறுவதாக வள்ளுவர் கூறியுள்ளார்.

இவ்வாறு இக்குறள்களில் தலைவன் ஒருவனை தலைவி மரியாதை நிமித்தம் "அவர்' எனப் பன்மையால் விளிப்பதாக வள்ளுவப் பெருந்தகை அமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.