22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

"புத்தம் வீடு' கட்டியவர்!

மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை மட்டுமே பெரும் புதினங்களாக எழுதி மக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில், "புத்தம் வீடு' என்ற வட்டார வழக்கு நாவலை எழுதி, தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 1:17 am IST

மேம்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை மட்டுமே பெரும் புதினங்களாக எழுதி மக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில், "புத்தம் வீடு' என்ற வட்டார வழக்கு நாவலை எழுதி, தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். "வட்டார வழக்கு' என்றும், "கொச்சை மொழி' என்றும் முத்திரை குத்தி மண் சார்ந்த படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் இந்நாவல் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்ய தன்னாலான முயற்சிகளை ஹெப்ஸிபா மேற்கொண்டார்.

ஹெப்ஸிபாவின் தந்தை மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். கணவர் தமிழ் இலக்கியம் படித்தவர். இந்நிலையில்தான் ஹெப்ஸிபா, கணவர் ஜேசுதாஸனோடு இணைந்து தமிழில் உள்ள படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல நினைத்தார். அதன் தொடக்கமாக பாரதியாரின் குயில்பாட்டு மற்றும் இன்னபிற

கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கணவரும் இவரும் சேர்ந்து "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

ஹெப்ஸிபாவுக்கு தான் சார்ந்த நாகர்கோவில் வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே எழுதவேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் தீவிரம் கொண்டது. பெயரிடப்படாத அந்த நாவலை அவர் இரண்டுவார காலத்திலேயே எழுதி முடித்து கணவரிடம் காண்பித்தார். ஜேசுதாஸனின் நண்பராக இருந்த எழுத்தாளர் நகுலனிடம் அந்தக் கையெழுத்துப் பிரதி சென்றது. நகுலன், அதை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தார். சுந்தர ராமசாமி படித்தார். பின்னர் 1964-ஆம் ஆண்டு "புத்தம் வீடு' என்ற பெயரோடு அந்த நாவல் வெளியானது.

கன்னியாகுமரி மாவட்ட பனைவிளை கிராமத்தைச் சார்ந்த கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சார்ந்த நில உடைமையாளர்களுக்கும் அவர்களிடம் பனையேறித் தொழில் செய்யும் அதே சாதியைச் சார்ந்த உழைப்பாளர்களான பனையேறிகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியே புத்தம் வீடு. இந்நாவல் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பலருடைய பாராட்டையும் பெற்றது.

ஏப். 9 (9.4.1925) ஹெப்ஸிபாவின்

பிறந்தநாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.