உயிர் மயக்கம் வேண்டாம்!
உயிருடன் உயிர் ஒன்றாது' என்ற தலைப்பில் வெளியான (15.12.2013) கட்டுரையில் இந்தவாண்டு, கடந்தவாண்டு, குறைந்தவளவில் என்று பேசுதல் எழுதுதல் தொடர்பான தடை-விடைகள் பற்றிய விளக்கமளித்தல் கடனாகின்றது.


உயிருடன் உயிர் ஒன்றாது' என்ற தலைப்பில் வெளியான (15.12.2013) கட்டுரையில் இந்தவாண்டு, கடந்தவாண்டு, குறைந்தவளவில் என்று பேசுதல் எழுதுதல் தொடர்பான தடை-விடைகள் பற்றிய விளக்கமளித்தல் கடனாகின்றது.
ஒரே சொல்லில் இரண்டு உயிரெழுத்துகள் இணைந்தொலித்தல் தமிழில் எவ்வகையானும் இல்லையென்பதில் இன்றளவும் மாற்றமில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றின் சேர்க்கையிலும், இரண்டு சொற்களை இணைத்தொலிக்கும் போதும் உயிரும் உயிருமாக எதிர்ப்படும்போது அவை மூன்று வகையாகப் பயன்படுகின்றன.
முதலாவது, நிலைமொழி உயிர் நீங்குதல், அது அன் ஐ -அதனை, அது ஐ -அதை, அது இல்லை - அதில்லை, இரவு இல்-இரவில், களவு இயல்-களவியல், கடுகு அளவும் - கடுகளவும் எனக் காண்க.
இரண்டாவது, ஆயிரம் அத்து ஒன்று - ஆயிரத்தொன்று, அந்த ஆள் -அந்தாள், சென்ற ஆண்டு - சென்றாண்டு என்றாதல் எண்ணுக.
சென்ற ஆண்டு எனப் பிரித்துப் பேசும்போது உயிரும் உயிரும் ஒட்டி நிற்றலாகக் கொள்ளுதல் முற்றும் பிழையாகும். அதன்படி நாய் ஓடியது, நல்லது அல்ல, அந்தாள் எனப் பேசுதலும், எழுதுதலும் கூடாதெனத் தடை விதிக்க வேண்டுமா? அஃதியலுமா? அந்த ஆள் - அந்தவாள், சென்ற ஆண்டு - சென்றவாண்டு எனப் பேசினாலும் எழுதினாலும் கேட்பார்க்கும், படிப்போர்க்கும் குழப்பம் ஏற்படாதா?
வருமொழி உயிர் நீங்குதலை தொல்காப்பியர்,
""ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்''
""அத்தின் அகரம் அகரமுனை இல்லை'' என விதிவகையாகவும்,
""முந்துகிளந் தன்ன
மேற்கிளந் தன்ன
முற்கிளந் தன்ன'' என, உடம்படு புணர்த்தலாகவும் கூறுகின்றார்.
""கற்றதனால் ஆய பயன்
உப்பமைந் தற்றால் புலவி
நாடிழந்த ததனினும் நனியின்னாது''
என்றாற்போலும் இலக்கிய வழக்குகளும் காண்க.
மூன்றாவது, இடையில் ஒரு மெய் தோன்ற, அதனுடன் வருமொழி உயிரிணைதல். இவ்வாறாகும் மெய்கள் பலவாதலும், அவற்றை வகைப்படுத்துதல் அரிதாகலும் எண்ணிய ஆசிரியர்,
""எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்''
எனப் பொதுவாகக் கூறிச்சென்றார். நிலைமொழி இறுதி யாதாயினும் வருமொழி முதல் உயிராகுங்கால் இடையில் அவற்றை உடம்படுக்கும் மெய்யொன்று கொள்ளுதல் தவிர்க்க வேண்டுவதல்ல - என்பதே நூற்பாவின் கருத்தாகும். ஆனால், தொல்காப்பிய உரையாளரான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், "உயிர்முன் உயிர் என்றாகுங்கால் இடையில் உடம்படுமெய் தோன்றும். அவையாவன யகரமும், வகரமும். இ, ஈ, ஐ - முன் யகரமும், ஏனைய உயிர்முன் வகரமும், ஏ-முன் இரண்டும் தோன்றும்' என வரையறுத்துக் கூறிவிட்டனர். பசியில்லை, ஈயென, மழையில்லை எனவும்; நல்லன வெல்லாம், கல்லா வொருவன், அதுவன்று, பூவொன்று, நன்றே யென்றான், நன்றோ வென்றான் எனவும் காண்க. எ, ஓ - இரண்டும் மொழியிறுதியாக அமைதல் மரபல்ல. ஏகாரம் வகர உடம்படுமெய் பெறும் சொல்லாட்சி காண்டல் அரிதாகின்றது.
ஆனாலும், தொல்காப்பியத்திலேயே, அறிவன், இறைவன், தலைவி, முனைவன், அறிவர், தலைவர் என்றாற் போல, இ, ஐ-முன் வகர உடம்படுமெய்யும் தோன்றுகிறது. மாயோன், ஆயிருதிணை என்பனவாக ஆகாரத்தின் முன் யகர மெய்யும் இடம்பெறுகின்றது. அன்றியும் முனைஞர், அறிநர், பொருநர், ஆகுந, தகுந, சொல்லுந என்றிவையும் பரவலாகின்றன.
இவற்றுள் ஞர், நர், ந என்பவற்றைத் திணை, பால் விகுதிகளாக நன்னூலாரும் கூறவில்லை. அவற்றில் ஞகர, நகர மெய்களை உடம்படுமெய்யல்லாத பிறவாகக் கொள்ளுதற்குரிய விதி தொல்காப்பியத்தில் யாண்டுமில்லை. ஆக, மெய்முன் உயிர் என்னுமிடத்தும் உடம்படுமெய் தோன்றும் சொல்லாட்சிகளும் பழைமையாகின்றன. தொல்காப்பியர் எல்லா மொழிக்கும் எனவும், உடம்படுமெய் எனப் பொதுமையாகவும் கூறியதன் நுட்பமும் இதுவே யென்பதுணர்க.
இவ்வளவும் ஆராய்ந்துணரமாட்டாத உரையாளர், எல்லா மொழிக்கும் என்பதை உயிர்முன் உயிர் எனவும், உடம்படுமெய்யாவன யகர, வகரமாகும் இரண்டு எனவும் கொண்டு அதனையும் அரைகுறையாகக் கூறியமை முதற்கோணலாயிற்று. முந்தைய இலக்கியங்களைத் தாமே ஆராய்ந்துணரமாட்டாத நன்னூலார், உரையாளர் கருத்தை அப்படியே நூற்பா வாக்கியமை முற்றுங்கோணலாயிற்று.
இலக்கணமாவது, மக்கள் வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் அமைந்துள்ள மரபுகளை வகை தொகைப்படுத்தித் தெளிவுறுத்துவதன்றி, அவற்றைப் புறந்தள்ளுவதல்ல. மக்களும், புலவோரும் பழைய சொல்லாட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்தல் இயல்பாகலாம். அதுவே, பழையன கழிதல் எனப்படும். அவ்வாறே, மொழி என்னும் கட்டமைப்பைச் சிதைக்காதன மட்டுமே புதியன புகுதலாக இலக்கண ஆசிரியரால் ஏற்கத்தக்கனவாகும்.
இலக்கண ஆசிரியர் தம் காலம் வரையுமாகும் வழக்குகள் அனைத்தையும் உளப்படுத்துதலின்றி, அவற்றுள் சிலவற்றைப் புறந்தள்ளுதல், இலக்கணம் என்பதன் இலக்கணத்தை மறுதலித்தலாகும். எனவே, உடம்படுமெய்களை விதந்தோதுதலில் நன்னூலார் செய்த குழப்பம் முற்றுந்தவறாதல் தெளிக.
எதிர்வரும் தலைமுறையர்க்கு தொல்காப்பியம் மறந்து, நன்னூல் மட்டுமே கொண்டு தமிழ் பயிற்றும் தகவின்மையை மாற்றிக்கொள்ளுதல் தவிர்க்கொணாக் கடனெனக் கொள்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...