திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: கல்-1

கல் என்னும் ஒலியொடு அருவி வீழ்ந்த இடம் பள்ளமாகியதை முன்னர் அறிந்தோம். அதனால், கல்லுதல் "தோண்டுதல்' பொருள் தந்ததையும் அறிந்தோம்.

News image
Updated On :5 நவம்பர் 2016, 8:32 pm

கல் என்னும் ஒலியொடு அருவி வீழ்ந்த இடம் பள்ளமாகியதை முன்னர் அறிந்தோம். அதனால், கல்லுதல் "தோண்டுதல்' பொருள் தந்ததையும் அறிந்தோம். "கல்' வழியாகக் கிடைத்த சொல், "கல்வி'; கல்வியின் இலக்கணம், ஆழ்ந்து அகன்று விரிதலாய், நுண்பொருள் காண்பதே கல்வியின் - கல்வி அறிவின் இலக்கணம். ""நுண்மாண் நுழைபுலம்'' என்பது வள்ளுவம். இதனையே "வாலறிவன்' இலக்கணமாக, ""ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே'' என்றார் மணிவாசகர்.
கல்வி நான்கு சுவர்களுக்குள் அடங்கி விடுவதா? கற்பித்ததைப் பெற்று, கற்றவர் தம்மளவில் நிறுத்திக் கொள்வதா? செல்வாக்கு என்பது என்ன? ஓரிடத்து ஒருவர் சொன்ன சொல், பலவிடங்களிலும் பலப்பலர் இடத்தும் அடைந்து, பயன் செய்வதுதானே, "செல்வாக்கு'! அது, தங்கியோ தேங்கியோ போய்விட்டால், அது தோன்றிய பயன்தான் என்ன?
கல்வி, கற்றுக் கொண்டவர் அளவில் நில்லாமல், ஊர்ந்து செல்ல வேண்டும்! பள்ளத்து வளையுள் - புற்றுள் கிடந்த உயிரி, உயர்ந்து "ஊரி' யாகவில்லையா? காளையும் யானையும் குதிரையும் தேரும் ஊர்தியாதல் பண்டே உண்டுதாமே! அப்படியே கல்வியும் ஊரி (உயரி - ஊரி)யாய் உலா வர வேண்டும். அதனால் ஏற்பட்ட கலைச் சொல்லே "கல்லூரி'யாம்!
 சிந்தாமணி தந்த காப்பியக் கொடை, "கல்லூரி'ச் சொல்லாம். கல்லாதவர் உளர் என்றால், ஆள்பவரும் அலுவலரும் கற்றவரும் கற்பிப்பவரும் இச் சொல்லின் பொருளை உணர்ந்து கடைப்பிடித்துக் கொள்ளாமையால்தான்!
""கல்வி இல்லா ஊரினைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்'' என்பது கல்வி அவாவிய மகாகவி பாரதி பார்வை! அவர்தம் தாசன் பார்வை, ""கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் ஆங்குண்டாம்!'' என்றார். கற்றவர் அனைவரும் அவரவர் அளவில் கற்பிப்பவராக இருந்திருந்தால், கல்லார் என எவரேனும் இருந்திருப்பரா?
உழவு, மருத்துவம், நெயவு, கொல்லு, தச்சு முதலாம் தொழில்கள் எல்லாம் குடும்பத் தொழிற் கல்வித் துறையாய்த்தானே வளர்ந்தன! வானார்ந்த மதில், கோட்டை, கோபுரம், மாளிகை எல்லாம், தொழிற்கல்விக் கூடங்களில் கற்றா வாய்ந்தன, வளர்ந்தன? சிற்பம், சித்திரம், சிலம்பம் எல்லாம் வழிவழியே வாய்க்கவில்லையா? இனிக் கல்லில் இருந்து பிறந்தது "கலை' என்னும் கலைச் சொல்!கலைதான் எண்ணி முடியுமா? ஒரு காலத்தில் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்றனர். இன்று அவ்வளவிலா கலைகள் உள்ளன? மருத்துவத் துறை ஒன்றாக இருந்தது. அறிவு மருத்துவம், சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என! வீட்டு மருத்துவம், பாட்டி மருத்துவம் எனவும் இருந்தன. ஆனால், உறுப்புவாரி மருத்துவக் கல்லூரிகள் பெருகிப் பெருகி வருகின்றனவே!
"கையறி மடைமை', செய்ந்நேர்த்தி எனப்பட்ட சமையல், வீட்டிலே வழிவழிக் கற்றுக்கொண்ட தல்லாமல், கல்வி நிலையங்களில் கற்பிக்கவா பட்டன? இன்று மனை இயற் கல்லூரி, அட்டில் கலைக் கல்லூரி என உண்டாகி உள்ளனவே! அதனில்தான் புல்லுணவு, புலாலுணவு, வடநாட்டு உணவு, மேல்நாட்டு உணவு என எத்தனை பிரிவுகள். கலை, பெருக்கமாகுமே அல்லாமல் சுருக்கமாகுமா?
கல், கல்வி, கலை என்ற அளவில் நின்றுவிட்டதா?

-தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.