
உலகின் விழுமிய எழுத்தோவியமாக விளங்குவது திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர் திருவள்ளுவர். முப்பால் என்னும் பெயருடன் திருவள்ளுவர் நல்கிய நூல் திருக்குறள் என்று மக்களால் ஏற்றுப் போற்றப்பட்டது.
திருக்குறளுக்கு பத்தாம் நூற்றாண்டில் உரை விளக்கம் வழங்கியவர் மடக்குடவர்; பதின் மூன்றாம் நூற்றாண்டில் உரை வரைந்தவர் பரிமேலழகராகிய வண்துவரைப் பெருமாள். நாளிது வரை முந்நூற்றுக்கு மேற்பட்டோர் உரைகள் தந்துள்ளனர்.
திருக்குறளை 1595-ஆம் ஆண்டு மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் இராமசாமி; 1730-ஆம் ஆண்டு லத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்; ஆங்கிலத்தில் நல்கியவர் கிண்டர்சுலி (1794). விவிலியத் திருநூல் போன்று பெருமை செய்தவர் சார்ச்சு யுக்ளோ போப்பு (1886). ஆங்கிலத்தில் மட்டும் ஐம்பதின்மர் உரை வழங்கியுள்ளனர். நரிக்குறவர் பேசும் "வக்கிரபோலி' மொழியில் கிப்டு சிரோமணி ஆக்கிய திருக்குறள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. கொரிய மொழிபெயர்ப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளிவந்துள்ளது.
திருவள்ளுவர் குமரிக் கண்டத்தில் தோன்றியவர்; சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர்; மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் ஆகியுள்ளது. திருவள்ளுவரின் தந்தை பெயர் "பேராழி மாமுனி' என்று யாழ்ப்பாணம் மானிப்பால் அமெரிக்க மிசன் அச்சக அகராதியில் (1874-ஆம் ஆண்டு) குறிப்பிடப்பட்டுள்ளது (பக்.526); நா.கதிரைவேற் பிள்ளையின் "தமிழ் மொழி அகராதி'யில் இச் செய்தி இடம்பெற்றுள்ளது (பக்.1092). சென்னை சாரதா பதிப்பகத்தார் கதிரைவேற் பிள்ளையின் "தமிழ் மொழி அகராதி'யின் செம்பதிப்பை வெளியிட்டுள்ளனர்.
"உலகப் பொதுச் சட்டம்' என்று திருக்குறளை முன்னீர்ப் பள்ளம் பூரணலிங்கம் போற்றினார்; "உலகின் விழுமிய எழுத்தோவியம்' என்று திரு.வி.கலியாணசுந்தரம் பாராட்டினார். பன்னாட்டு நிறுவனமாகிய, உலகக் கல்வி அறிவியல் பண்பாட்டு மையம், "உலகின் ஒப்பற்ற நூல் திருக்குறள்' என்று பறைசாற்றுகிறது.
இருபது நூற்றாண்டுகளாகப் போற்றிப் பாராட்டப்படும் திருக்குறளை உலக மக்கள் அனைவரும் ஏற்று, வாழ்வியல் ஆக்கும் நாளை எதிர்நோக்குவோம்.
-முதுமுனைவர் பால் வளன் அரசு தலைவர்,உலகத் திருக்குறள் மையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.