இலக்கண நூல்கள் ஆண்டினைப் பெரும்பொழுது (6) எனவும், ஒரு நாளைச் சிறுபொழுது (6) எனவும் காரண}காரிய அடிப்படையில் வகைப்பாடு செய்து, வாழ்வில் கடைப்பிடிக்க வழி செய்தன.
ஒரு நாளைக்கு ஆறு சிறுபொழுதுகள் எனப் பிரித்து ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணிநேரம் எனப் பகுத்துக் குறிப்பிட்டது. வைகறை (அதிகாலை), காலை, பகல், மாலை, இரவு, யாமம் (நள்ளிரவு) எனச் சிறுபொழுதுகள் வெவ்வேறு பெயர்களில் ஆறாகப் பிரிக்கப்பட்டன.
இந்நாளில் இவ்வரையறைகள் சரிவரப் பேசப்படாததால் மாலை, இரவு எனக் குறிப்பிட வேண்டிய இடங்களில் தவறாக அறிந்து, "மாலை}7 மணி' எனக் குறிப்பிடும் நிகழ்வுகளும் உண்டு. முன்னிரவு, பின்னிரவு எனப் புரிந்துகொள்ள ஏதுவாகச் சொல்லப்படுதலும் உண்டு.
சூரியனின் கதிர் ஒளியின் அடிப்படையில் பகல், முற்பகல், பிற்பகல், நண்பகல் என்று பல்வேறு பெயர்களுடன் காலம் பிரித்து வழங்கப்படுகிறது. இஃதன்றி இலக்கியங்களில் "எல்லியும் பகலும்' என இரண்டனுள் அடக்கிச் சொல்லப்படுவதும் வழக்கமே.
சூரியனுக்குக் கால அடிப்படையில் பகலோன், பகலவன் என்ற பெயர்களும் இலக்கியங்களில் வழங்கப்படுகின்றன. சமயக் குரவரும், அருளாளரும் தம் இலக்கியத்துள், "துஞ்சிருள் காலை மாலை' என்றும், "காலை எழுந்து கடிமலர் தூயன தாம் கொணர்ந்து .... மாலை மதியம் அன்றோ!' என்றும் காலம் பற்றிக் குறிப்பர்.
அப்பரடிகள், திருப்பழனத்தில் வழிபாடு செய்கின்றபோது, "முன்மாலை நகுதிங்கள் முகிழ் விளங்கு முடிச்சென்னி' என்று, மாலைப்பொழுதைக்கூட "முன்மாலை' எனப் பகுத்து, பிறைச் சந்திரன் தோன்றுகின்ற, இரவின் இருள் விரியாத முன்மாலைப்பொழுது எனப் புதுச்சொல்லைப் பயன்படுத்திப் பாடியுள்ளார்.
இறையருள் வயப்பட்டு அம் மனவெழுச்சி நீட்சியில் பதிகம் பாடினாலும், அதிலும் நுட்பமாகப் புதிய சொல்லாட்சியாக, "முன்மாலை' என்பதை அப்பரடிகள் இடம்பெறச் செய்தது அருமையானது.