ஊடலும் கூடலும் காதலர்க்கு இயல்பே. இதை வள்ளுவரும் தனது குறளில், "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர் / இந்நீரர் ஆகுதிர் என்று' (1319) என்கிறார். ஊடிய அவளை நான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்கும்போதும் "பிற மகளிரிடமும் இத்தன்மை உடையவர் ஆவீர்' என அவள் சினம் கொள்வாள். ஏறத்தாழ இக்கருத்தையொட்டி பரிபாடலிலும் இத்தகைய ஊடல் காட்சி ஒன்று.
மயில் ஒன்று ஒருவனது காதலியை ஒத்த இயல்புடன் தோகை விரித்து களிநடனமாட, அதை மையமாக வைத்து தலைவி ஊடல் கொள்கிற காட்சி.
திருப்பரங்குன்றம் சோலையில் தலைவனும் தலைவியும் கருத்தொருமித்து மெய்ம்மறந்து கண்களை மூடியுள்ளார்கள். தலைவன் மட்டும், எதிரே வந்த ஒரு புள்ளிமயில் நீலமணிகளை ஒத்த நிறத்தை தன் தோகையில் பெற்று, தன் தலைவியின் சாயலைப் பெற்று நடனமாடி நின்றதை மனக்கண்ணால் மீண்டும் ரசித்து குறுநகை புரிகிறான்.
அதை கவனித்த தலைவி அவனிடம் "உண்மையைத் சொல்லுங்கள்; யாரை நினைத்து குறுநகை புரிந்தீர்? அவள் யார்?' என சினம் கொள்கிறாள்.
அதற்கு அவன் "அன்பே! உன் இயல்பைக் களவாடி தானும் நின்னொப்பதாய் ஆடி மகிழும் இம்மயிலின் தன்மையையும் அறியாமையையும் எண்ணி அம்மயிலின் மீது இரக்கமுற்று நோக்கி கண்மூடி குறுநகை புரிந்தேன்; என் மேல் சினம் கொள்ளலாமா?' என்றதும் தலைவி சினம் தணிந்தாள்.
தமிழரின் இரு விழி போன்ற அகம், புறம் என்னும் இரு பொருளின் கூடலே, பரிபாடல். மேலும், இந்த ஊடலை பரிபாடல் "அழகிய தேருடைய பாண்டியனின் எல்லையில் உள்ள திருப்பரங்குன்றத்தின் இயல்பு இது' என்கிறது.
ஒள்ளொளி மணிப் பொறியால் மஞ்ஞை நோக்கித்தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திருநுதலும்;
உள்ளிய துணர்ந்தேஃது உரையினி, நீஎம்மை
எள்ளுதல் மறைத்த லோம்பு என்பாளைப் பெயர்த்தவன்
காதலாய்! நின்னியல் களவெண்ணிக் களிமகிழ்
பேதுற்ற இதனைக் கண்டு யான் நோக்க, நீஎம்மை
ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல்
ஆய்தேரான் குன்ற இயல்பு. (பரி.செவ்வேள்: பா.18)