Enable Javscript for better performance
The benefits of trees- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மரங்களின் பயன்கள்!

    By பி.என்.பரசுராமன்  |   Published On : 27th February 2022 04:56 PM  |   Last Updated : 27th February 2022 04:56 PM  |  அ+அ அ-  |  

    tm3


    மரங்கள் பலவிதம். ஒவ்வொரு மரத்திற்கு ஒவ்வொரு தன்மை - குணம் உண்டு. மரங்களைப் பற்றிப் பாடாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு, மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மரங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். வள்ளுவரிடம் இருந்து பார்க்கத் தொடங்கலாம் வாருங்கள்!

    பலவிதமான திறமை பெற்றிருந்தாலும், பல விஷயங்களில் கூர்மையான அறிவு படைத்தவராக இருந்தாலும்,  மனிதத் தன்மை-மனிதப் பண்பு என்பது இல்லாவிட்டால், அவர்கள் மரத்தைப் போன்றவர்கள் என்பது வள்ளுவர் வாக்கு. 

    அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
    மக்கட் பண்பில்லாதவர்  

    (குறள்-997)

    மனிதத்தன்மை-மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரத்தைப் போன்றவர்கள் என்று சொன்னாரேதவிர, அவர்களை மரம் என்று சொல்லவில்லை வள்ளுவர். காரணம், மரம் பல விதங்களிலும் மனித குலத்திற்கு உதவி செய்கிறது. ஆனால், மனிதப்பண்பு இல்லாதவர்களால் அடுத்தவர்க்கு எந்தப் பலனும் இல்லை. ஆகையால்தான், மனிதப்பண்பு இல்லாதவர்கள் மரத்தைப் போன்றவர்கள் என்றார்.

    ஒளவையார் மற்றொரு விதமான மரத்தைப் பற்றிச் சொல்கிறார். "கிளைகள், கொம்புகள் ஆகியவற்றுடன் காட்டில் இருப்பவை நல்ல மரங்கள் ஆகா; கல்வியறிவு இல்லாதவனும், பிறர் குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும், ஓரறிவுடைய மரத்தைவிடக் கடையராவர் - என இகழ்ச்சிக் குறிப்பு தோன்றப் பாடுகிறார்.

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய 
    மாட்டாதவன் நன்மரம்   (மூதுரை-29)

    பொதுவாக மரம் என்று பார்த்ததைத் தொடர்ந்து, சித்த புருஷர்கள் வாழ்வில் இடம்பெற்ற ஒருசில மரங்களின் பெயர்களையும் அவற்றின் தன்மைகளையும் பார்க்கலாம். 

    அகத்தியர் தன் சீடர்கள் சிலரைத் தேரையரைப் பார்த்து வருமாறு அனுப்பினார்.  கூடவே, "போகும்போது வழியில் களைப்பாக இருந்தால், புளிய மர நிழலில் தங்கி இளைப்பாறிப் பின் புறப்படுங்கள்!'  என உத்தரவும் இட்டார். 
    சீடர்களும் அவ்வாறே செல்லும்போது, வழியில் ஆங்காங்கே புளியமர நிழலில் தங்கி ஓய்வெடுத்துச் சென்றனர்.  நான்கைந்து நாள்கள் ஆயின. அதன்பின் தேரையரை அடைந்த சீடர்கள், அகத்தியர் சொன்ன தகவலைச் சொல்லி, தேரையர் முன் ரத்த வாந்தி எடுத்தார்கள்.

    வாந்தி எடுத்த சீடர்களை வாகாகப் பார்த்த தேரையர், அவர்கள் எலும்பும் தோலுமாக இருந்ததையும் கவனித்தார்; "குறுமுனியின் சீடர்கள் குருதி கக்குவதா? அஞ்சாதீர்கள்! போகும்போது, புளியமர நிழலில் தங்காமல் வேப்ப மர நிழலில் இளைப்பாறிச் செல்லுங்கள்!' என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.

    அதன்படியே அகத்தியரின் சீடர்களும் வேப்பமர நிழலில் இளைப்பாறித் திரும்பினார்கள். அவர்களின் ரத்த வாந்தியும் நின்றது; உடம்பும் ஆரோக்கியம் பெற்றது. இவ்வாறு மரங்களின் நிழல்கள் செய்யும் நன்மை - தீமைகளை, நடைமுறையிலேயே விளக்கியவர்கள் சித்த புருஷர்கள். 

    அடுத்து, மரம் என்ற ஒரு சொல்லை வைத்து,பலவிதமான மரங்களைச்சொல்லி, வேறொரு பொருளும் சொல்லித் தமிழின் ஆளுமையை வெளிப்படுத்தும் பாடலைப் பார்க்கலாம்!

    மரமது மரத்தில் ஏறி மரம் அதைத் தோளில் வைத்து
    மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
    மரமது வழியே சென்று வளமனைக் கேகும்போது
    மரமது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

    "அரசு' என்பது ஒரு மரத்தின் பெயர். அரசரையும் இது குறிக்கும். "மா' என்பது மரத்தின் பெயர். இது குதிரையையும் குறிக்கும். மரமது மரத்தில் ஏறி- என்பதற்கு, அரசர் குதிரையில் ஏறி என்பது பொருள்.  ஈட்டி என்பது மரத்தின் பெயர். ஆயுதத்தையும் இது குறிக்கும். மரமதை தோளில் வைத்து - தோளில் வேலாயுதத்தைத் தாங்கி என்பது பொருள்.

    வேங்கை என்பது ஒரு மரம். "புலி'க்கும் இந்தப் பெயர் உண்டு. மரத்தினை மரத்தால் குத்தி என்பதற்கு, வேங்கையை-புலியை ஈட்டியால் குத்தி என்பது பொருள். 

    இவ்வாறு புலியைக் கொன்ற அரசர் வெற்றி வீரராகத் திரும்பும்போது, பெண்கள் அவருக்கு  "மரமுடன் மரம் எடுத்தாரே'. "ஆல்' என்பது ஒரு மரம்; "அத்தி' என்பது ஒருமரம். "ஆலத்தி எடுத்தார்கள்' என்பது பொருள். 

    தமிழ் மொழியின் வளத்தை மட்டுமல்லாமல், அதன் ஆளுமையையும் விளக்கும் இப்பாடல், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுந்தரக் கவிராயர் என்பவரால் எழுதப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp