நனியஞ்சத் தக்கஅவை வந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வது உணர்வார்-பனியஞ்சி
வேழம் பிடி தமூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழ்அம்பு வீழா நிலத்து. (பாடல்-265)
ஆண் யானையானது பனியால் வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக்கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலைநாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒருபோதும் குறிதவறி நிலத்திலே வீழ்வதில்லை. அதுபோலவே, "செய்யத்தக்கது இது' என உணரும் அறிவுடையோர், தமக்கு மிகவும் பயப்படத்தக்கதான துன்பங்கள் வந்தாலும், அதற்காக ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். "ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி.