சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச்- செல்வத்து
இடரின்றி ஏமாந் திருந்தாரே, நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். (பாடல்-255)
தாம் சொல்லாமலே, தம் முகத்தை நோக்கி, தம்முடைய உள்ளக் குறிப்பினை அறிந்து, வேண்டியன செய்யும் பண்பினை உடைய தம்முடைய மனையாளே, தம் வீடு தேடி வந்த விருந்தினருக்கு உணவளித்துப் பேண, செல்வ நிலையிலே யாதொரு குறைபாடும் இல்லாமல் அரண் பெற்றவராக வாழ்ந்து வருபவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். நாள்தோறும் இறைத்துக் கொள்வதற்குக் கடலினிடத்தே ஏற்றமிட்டவர்கள் போன்றவர் அவர்களே யாவர். "கடலுள் துலாம்பண்ணி னார்' என்பது பழமொழி.