
கடைசி இரண்டு நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், யாரையும் சந்திக்கவோ, பேசவோ முடியாது என்பதால் வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு நடை புத்தகக் காட்சிக்குக் கிளம்பிவிட்டேன். பவித்ரா நந்தகுமாரின் புத்தகத்தை தினமணி அரங்கில் வெளியிட புதன்கிழமை ஏற்கெனவே சென்றிருந்தேன். அப்போது ஒரு சில வரிசைகளில் உள்ள அரங்குகளை பார்ந்திருந்ததால் ஏனைய வரிசைகளையும் பார்வையிட விழைந்தேன்.
வனிதா பதிப்பகம் மயிலவேலன், பபாசி தலைவர் சேது.சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே. முருகன் உள்ளிட்டவர்களை சந்தித்துவிட்டு உள்ளே நுழைந்தேன். புதன்கிழமை நண்பர்கள் ராசி.
அழகப்பன், ப்ரியன் ஸ்ரீநிவாசன், ராஜ் கண்ணன், நக்கீரன் கோபால் உள்ளிட்டவர்களை சந்தித்து அளவளாவ முடிந்தது. வானதி ராமநாதன், முல்லை பழனியப்பன், குமரன் பதிப்பகம் வைரவன் உள்ளிட்ட சில முக்கியமான பதிப்பக ஆளுமைகளிடம் நின்று நிதானித்து பேச முடியாததில் சற்று வருத்தம்தான்.
வெள்ளிக்கிழமை நிறைய அரங்குகளைத் தரிசிக்கவும், புதிதாக வெளிவந்திருந்த படைப்புகளைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. விழிகள் பதிப்பகத்தின் வேணுகோபால்-நடராஜன், அகநி பதிப்பகத்தின் கவிஞர் முருகேஷ், தமிழ் கோட்டத்தின் தாயம்மாள் அறவாணன், வ.உ.சி. பதிப்பகத்தின் கவிஞர் இளையபாரதி என்று பலரிடமும் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தது.
மணிவாசகர் பதிப்பகத்தின் குருமூர்த்தி, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸின் வேடியப்பன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனக்கு நெருக்கமான அல்லயன்ஸ், நர்மதா, சந்தியா, வர்த்தமானன், விஜயா உள்ளிட்டவற்றின் அரங்குகளை மட்டுமல்ல, காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் போன்ற முக்கியமான சில பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் போக முடியாதது பெரிய குறை. நிறைவு நாளான இன்று மாலை உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பமை அரங்க.மகாதேவனின் உரையைக் கேட்கப் போகும்போது அந்தக் குறையை ஈடுகட்ட நினைக்கிறேன்.
புத்தகக் காட்சி அரங்குகளைப் பார்வையிடும்போது ஒரு சில நண்பர்கள் நம்மிடையே இல்லாமல் இருப்பது நினைவில் முள்ளாய் தைத்தது. முகமலர்ந்த சிரிப்புடன் வரவேற்கும் உமா பதிப்பகம் லட்சுமணனும், என்னைத் தனது சகோதரனாகவே நினைத்துப் பழகும் தமிழ்மண் பதிப்பகம் இளவழகனும் நம்மிடையே இல்லை என்கிற குறை எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான பதிப்பக நண்பர்களுக்கேகூட இருக்கிறது. லட்சுமணனின் மகன் ராமநாதனையும், இளவழகனின் மகன் இனியனையும் பார்த்தபோது பழைய நினைவுகள் நிழலாடின.
பொருட்காட்சிபோல "புத்தகக் காட்சி' என்று அழைப்பதைவிட, "புத்தகத் திருவிழா' என்று அழைப்பதுதான் இன்னும்கூட பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு ஏனோ தோன்றுகிறது. உண்மையிலேயே நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் கடந்த 17 நாள்கள் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது என்பதை யார் மறுத்துவிட முடியும்?
"தினமணி' அரங்கில் என்னைச் சந்தித்த நண்பர் பரிதி பதிப்பகம் இளம்பரிதி, அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் "முன்றில்' இலக்கிய இதழின் முழுத் தொகுப்பை என்னிடம் தந்தார்.
9 ஆண்டுகள் வெளிவந்த "முன்றில்' இதழ்களை எழுத்தாளர் மா.அரங்கநாதனின் மகன் உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவனே தொகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பது தனிச் சிறப்பு. ஏனென்றால், "முன்றில்' இதழ்களை வெளிக்கொணர்வதில் தனது தந்தையாருக்கு உதவியாக இருந்து செயல்பட்டவரே அவர்தான்.
"கணையாழி' இதழ்கள் தொகுக்கப்பட்டதுபோலவே, "முன்றில்' இதழ்களும் அதன் மூல வடிவத்திலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது. "முன்றில்' வெளிவந்த காலத்தின் அச்சு வடிவம், எழுத்துருக்கள் போன்றவை அப்படியே தொகுக்கப்பட்டிருப்பதால் அந்த காலகட்டத்தின் இலக்கிய அடையாளமாகவே இது போற்றப்படும்.
அது மட்டுமல்ல, மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகள் என்று போற்றப்படும் ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், கலாப்ரியா உள்ளிட்ட பலரின் ஆரம்பகால படைப்புகளுக்கு வடிகாலாக அமைந்த பெருமை முன்றிலுக்கு உண்டு.
ஏற்கெனவே, காவ்யா பதிப்பகம் "முன்றில்' இதழ்களில் வந்த படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இளம்பரிதி பழைய இதழ்களை அப்படியே ஒளியேற்றம் செய்து வெளிக்கொணர்ந்து இருக்கிறார். அதனால், ஒரு தொகுப்பைப் படிப்பதுபோல இல்லாமல் மீண்டும் "முன்றில்' இதழ்களை மீள்வாசிப்பு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது இப்போதைய புது வடிவம்.
மா.அரங்கநாதன், க.நா.சுப்ரமணியம், அசோகமித்திரன் என்கிற மூன்று இலக்கிய ஆளுமைகளின் மேற்பார்வையிலும், பங்களிப்பிலும் வெளிவந்த இலக்கிய இதழ் என்கிற பெருமை "முன்றில்' இதழுக்கு உண்டு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் க.நா.சு., நகுலன், வல்லிக்கண்ணன், பிரமிள் ஆகியோரின் கட்டுரைகளும், அசோகமித்திரன், மா.அரங்கநாதன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரின் சிறுகதைகளும் இப்போதும்கூட ரசனைக்குரியவையாக இருக்கின்றன.
ஜெயமோகனின் கவிதை, அருண்மொழியின் "மூன்று சிறந்த திரைப்படங்கள்' கட்டுரை, எஸ்.ராமகிருஷ்ணனின் "ராமசாமிகளின் வம்ச சரித்திரம்', நாஞ்சில் நாடனின் "சதுரங்க குதிரை' நாவல் குறித்த நகுலனின் மதிப்பீடு என்று இலக்கிய மாயாஜாலம் நடத்தியிருக்கிறது, ரூ.30 ஆண்டு சந்தாவுடன் வெளிவந்த "முன்றில்' இதழ். கவிஞர்கள் பலரின் எழுத்துகள் "முன்றில்' இதழ் மூலம் ஊர்வலம் நடத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக "முன்றில்' இதழில் வெளிவந்திருக்கும் தலையங்கங்களும், கட்டுரைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
ராட்சஷன் என்கிற தொலைக்காட்சி நாடகம் குறித்த ஆர்.மகாதேவனின் விமர்சனத்தில் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரை இணைத்திருக்கும் சாதுர்யம் புன்முறுவலை வரவழைத்தது. அதேபோல, "முன்றில்' இதழுக்குப் படைப்புகளை அனுப்புவது குறித்த குறிப்பும் ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, மாரிமுத்து ஆகியோரின் அட்டைப்பட ஓவியங்களும் ஒரு காலகட்டத்தின் இலக்கிய பதிவாக "முன்றில்' இதழைப் பார்க்கத் தோன்றுகிறது.
புத்தகக் காட்சியில் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் அரங்கில் இருந்தார் கவிஞர் பிருந்தாசாரதி. சமீபத்தில் அவர் வெளிக்கொணர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படத்துக்காக அவரை எத்துணை பாராட்டினாலும் தகும். தனது "முக்கோண மனிதன்' புத்தகத்தைக் கையொப்பமிட்டு அன்பளிப்பாகத் தந்தார் அவர். அதில் இடம் பெற்ற "கடலினும் பெரிது' என்கிற கவிதை இது-
எளிதாய்க்
கடந்து செல்கிறோம்
கண்ணீர்த் துளியை
கடலில் இருப்பதைவிட
அதிகமான உப்பு
துளி கண்ணீருக்குள் இருக்கிறது
எனும் உண்மையை உணராமல்.