மூவரின் விருப்பத்துக்கு இணங்கி அங்கே முருகப் பெருமான் காட்சி அளித்தார். இளமை ததும்பும் கோலத்தில் அழகனாகத் தோன்றிய முருகப் பெருமான், அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு தரும் வண்ணம், "யாமே விதியாக நின்று படைப்போம், யாமே காப்போம், யாமே அழிப்போம். முத்தொழிலுக்கும் உரியவர் யாமே' என்று மூன்று வினைகளையும் புரிகின்ற மும்மூர்த்தியாக அவர்களிடம் தம்மைக் காட்டி நின்றார். இனி இத்தகைய விவாதங்களில் ஈடுபடாது, பரம்பொருளில் ஒன்றிவிட வழிசொன்னார். முக்காலமும் யானே என முருகப் பெருமான் உணர்த்தியது கண்டு அவரை வணங்கிய முனிவர்கள், முருகப் பெருமானிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள். குழப்பத்தில் ஆழ்ந்த தங்களுக்கு முருகன் அருள் புரிந்து குழப்பத்தை நீக்கியதுபோல், இந்த இடத்தே கோயில் கொண்டு பெருமானைத் தரிசிக்க வரும் பக்தர்க்கெல்லாம் அருளை வாரி வழங்கி, ஞானமும் செல்வமும் அருளும் பொருளும் அளித்திட வேண்டுமாய்ப் பிரார்த்தனை செய்தார்கள். முனிவர்கள் மூவரின் கருத்தைச் செவிமடுத்த முருகனார் இங்கே பால சுப்ரமணியனாக இளமை ததும்பும் கோலத்தில் எழுந்