விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நோய் தீர்க்கும் நாயகி காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் திருக்கோயில்

காரை மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதி. அங்கே குடும்பத்துடன் அமர்ந்து அருளாட்சி நடத்தி வந்தாள் காட்டம்மன். அவளுக்கு ஏழு குழந்தைகள். இந்தக் குழந்தைகளைத் தன் கண் போல் பொத்திப் பொத்தி வளர்த்தாள் காட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:38 pm

மயில் வாகனன்

காரை மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதி. அங்கே குடும்பத்துடன் அமர்ந்து அருளாட்சி நடத்தி வந்தாள் காட்டம்மன். அவளுக்கு ஏழு குழந்தைகள். இந்தக் குழந்தைகளைத் தன் கண் போல் பொத்திப் பொத்தி வளர்த்தாள் காட்டம்மன்.

காட்டம்மனின் சகோதரி கொப்புடையம்மன். அவளும் காரைக் காட்டில் அமர்ந்து அருளாட்சி நடத்திவந்தாள். ஆனால், இவளுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே காட்டம்மனின் இடத்துக்குச் சென்று, அவளின் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வாள் கொப்புடைய நாயகி. சகோதரியின் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும். அதனால் கொழுக்கட்டைகள், பலகாரம் முதலியன செய்து, வாஞ்சையுடன் அந்தக் குழந்தைகளைக் காணச் செல்வாள். ஆனால் காட்டம்மனுக்கோ, குழந்தையில்லாத சகோதரி தன் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வது பிடிக்கவில்லை. ஒரு நாள் இப்படி தன் சகோதரி வரும் நேரம் பார்த்து குழந்தைகளை மறைத்து வைத்துவிட்டு, அவர்களைக் காணவில்லை என்று பொய் சொன்னாள் காட்டம்மன். நடந்ததை தன் ஞானத்தால் அறிந்து கோபம் கொண்ட கொப்புடைய நாயகி, "எதை வைத்து இப்படிச் சொன்னாய்? அப்படியே காணாமல் போகட்டும்' என்று சொல்லிவிட்டாள். மறைத்து வைத்திருந்த குழந்தைகள் எல்லாம் கற்களாயின. இதனால் மிகவும் வருந்தினாள் காட்டம்மன். ஆனால் அதே கோபத்துடன் காரைக் காட்டுக்குத் திரும்பிய கொப்புடைய நாயகி, அங்கே கோயில் கொண்டாள்.

இப்படியொரு தல புராணத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது காரைக்குடியில் உள்ள ஸ்ரீகொப்புடையம்மன் கோயில்.

பொதுவாக கிராமங்கள் என்றால் கிராம தேவதைகளாக தெய்வங்கள் வழிபடப்படும். அவற்றுக்கென்றே சில கதைகள் மக்களிடையே புழங்கப்பட்டு வரும். அதுபோல் இங்கும் இவ்வாறு ஒரு கதை வழக்கத்தில் உள்ளது.

காரை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இதனை ஊராக அமைக்க காட்டைத் திருத்தினார்கள். மக்கள் குடியேற வசதியாக நகரை அமைத்தார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊர் ஆததால் இது காரைக்குடி ஆனது. இங்கே செஞ்சை காட்டுப் பகுதியில் இருக்கிறது இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாம் காணும் நடராஜர் விக்ரஹமே மூலவர் மற்றும் உற்ஸவர். அதுபோல் இங்கே கொப்புடைய நாயகி கோயிலிலும் மூலவர் விக்ரஹம் தனியாகக் கிடையாது. உற்ஸவ விக்ரஹமே மூலவராகவும் வழிபடப்படுகிறது. இங்கே காவல் தெய்வமாக கருப்பண்ணசாமி வேறு எங்கும் இல்லாதபடி குதிரையில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்.

கொப்பு என்றால் கிளை என்பர். இங்கே அம்பிகை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் தீச்சுவாலை கிரீடத்துடன் பஞ்சலோக உற்ஸவத் திருமேனியாகக் காட்சி தருகிறாள். அம்பாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், வலது மேல் கரத்தில் சூலத்தை ஏந்தியபடியும், இடது மேல் கரத்தில் பாசம் ஏந்தியபடியும், இடது கீழ் கரத்தில் கபாலத்தைத் தாங்கியும் காட்சி தருகிறாள்.

திருவிழா: சித்திரை மாதக் கடைசி செவ்வாய்க் கிழமை சித்திரைப் பெருந் திருவிழா தொடங்குகிறது. வைகாசி முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். சித்திரையில் 2வது அல்லது 3வது செவ்வாய்க் கிழமையில் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி பள்ளியெழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் திருவிழாக்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கே பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

செவ்வாய்ப் பெருந்திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பானது. பனை மரச் சட்டங்களால் ஆன இந்தத் தேர், கொடி கொண்டு இணைத்து முறுக்கேற்றிக் கட்டி செய்யப்படும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலை அம்மன் தேரில் ஏறி பிற்பகல் வீதியுலா வருவார். தேர் புறப்பட்டு கண்மாய் வழியாகவே சென்று மாலையில் காட்டம்மன் கோயிலில் எழுந்தருளும். 9ஆம் நாள் திருநாளில் அங்கிருந்து புறப்பட்டு கோயில் வந்து சேரும். தேர் வரும் பாதையில் கண்மாய்கள் உள்ளன. சிலநேரம் கண்மாயில் நீர் இருக்கும் என்பதால், இவ்வாறு சட்டத்தேர் செய்துவைத்தனர் முன்னோர் என்கின்றனர்.

பிரார்த்தனை: நோய்களைத் தீர்த்துவைக்கும் தெய்வமாகத் திகழ்கிறாள் கொப்புடைய நாயகி. மேலும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளர்ச்சிக்காகவும், கல்யாண பாக்கியம் கிட்டவும், குழந்தை வரம் வேண்டியும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். தங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தவர்கள் நேர்த்திக் கடனாக அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் அதனை நிறைவேற்றுகின்றனர்.

பொதுவாக காளி, துர்க்கை போன்றவர்கள் வடக்கு நோக்கிக் காட்சி தருவர். ஆனால் இங்கே அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறாள். அவள் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். தன்னை வணங்குவோர்க்கு கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் வாரி வழங்குகிறார் அன்னை.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 6- 11 மாலை 4- 8 வரை.

தகவலுக்கு: 04565-238861

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.