விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கண்கள் அடிக்கடி துடிக்கிறதா? இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?

கண்கள் அடிக்கடி துடிப்பதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் பற்றி...

News image
கோப்புப் படம்- ENS
Updated On :14 மார்ச் 2026, 7:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிலர் வெகு நேரத்திற்குப் பிறகுதான் கண்களைச் சிமிட்டுவார்கள். சிலருக்கு கண்கள் அடிக்கடி துடிக்கும், அதிகமாக கண் சிமிட்டுவார்கள், அதிலும் காபி குடித்தவுடன் கண்கள் அதிகமாக துடிப்பது போன்று உணரலாம். இதெல்லாம் பொதுவானவை, தன்னிச்சையாக நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கண் சிமிட்டுவதற்கு பின்னால் சில பிரச்னைகள் உள்ளதாகவே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதாவது நீங்கள் வழக்கமாக எவ்வளவு நொடிகளுக்கு ஒருமுறை கண் சிமிட்டுவீர்கள் என்பது தெரியும். சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சிமிட்டுவது போல தோன்றினால் அதனைக் கவனிப்பது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர்.

கண்களை அதிகமாக சிமிட்டுவது ஒன்றும் நோயல்ல. ஆனால் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களினால் நிகழ்வதாகவும் அதனைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதாவது உங்கள் உடலில் ஏதாவது ஒரு நிகழ்வு வேகமாக நடக்கிறது, குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உடலுக்கு மூளை அறிவுறுத்தும் ஒரு சிக்னல் என்று கூறலாம்.

Story image

ஏன் ஏற்படுகிறது?

ஆரேட் மருத்துவமனையின் மனநல ஆலோசகர் டாக்டர் விஷ்ணு கேட், கேர் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் உமேஷ் இதுபற்றி விளக்குகிறார்கள்.

கண்களை அதிகமாக சிமிட்டுவதை மயோகிமியா என்று கூறுவார்கள். பெரும்பாலான மயோகிமியா பாதிப்பு இல்லாததுதான்.

சரியான தூக்கம் இல்லாதது, அதிகமாக டிவி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, பதற்றம், உடல் இயக்கத்தைத் தூண்டும் காஃபின் போன்ற உணவுப்பொருள்களை அதிகம் சாப்பிடுவது, கண்களில் வறட்சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துகள் குறைவாக இருப்பது ஆகிய காரணங்களினால் கண்கள் அதிகமாகத் துடிக்கும். இவைகளால் கண்களுக்கு அதிக அழுத்தம் அல்லது வறட்சி ஏற்படுவதால் கண்கள் வழக்கத்திற்கு மாறாக துடிக்கிறது.

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கண்கள் அதிகமாக துடிக்கும். அதனால் மன அழுத்தத்தை சரியான அளவில் நிர்வகிப்பது முக்கியம். ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பயன்பாட்டினால்தான் மன அழுத்தமும் அதிகரிக்கிறது.

இதைச் சரிசெய்தாலே கண்கள் துடிப்பது ஓரளவு சரியாகிவிடும், நீங்கள் காஃபின் சாப்பிடுவதைக் குறைத்து நன்றாக தூங்கி எழுந்தாலே சரியாகிவிடும். பதற்றமில்லாமல் இருக்க வேண்டும்.

அதன்பிறகும் கண்களைத் திறக்கும்போது மூடும்போது அதிக அழுத்தம், தசைப் பிடிப்பு போன்ற நிலை, கண்கள் வீக்கம், சிவப்பாதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அறிகுறிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால், முகத்தின் மற்ற பகுதிகளுக்கு இது பரவினால் கண் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் கண்களில் நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம். ஏனெனில் கண் சிமிட்டுவது மூளைத் தண்டுடன் நரம்புகள் வழியாக தொடர்புடையது.

மயோகிமியா பெரும்பாலும் கீழ் இமையைத்தான் அதிகம் பாதிக்கிறது.

Story image

என்ன செய்ய வேண்டும்?

போதுமான தூக்கம் இருக்க வேண்டும். தூக்கத்திற்கு முன்னதாகவும் தூங்கி எழுந்தபிறகும் ஸ்மார்ட்ஃபோன், டிவி பார்க்கக்கூடாது.

கண் தசைகளைப் பாதிக்கும் காஃபின் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைக்கவும்.

மன அழுத்தத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வோர் கண்கள் வறட்சியாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று ப்ளூலைட் ஒளியைத் தடுக்கும் கண்ணாடி அணிவது நல்லது.

மருத்துவரின் ஆலோசனைப்படி, கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன், டிவி பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்.

20 நிமிடங்களுக்கு ஒருமுறை தூரமாக பார்ப்பது, கண்களை மற்ற திசைகளில் சுழற்றுவது என கண்களுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுப்பது கண்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

வெதுவெதுப்பான சுத்தமான நீரால் தினமும் 2- 3 முறை கண்களைக் கழுவலாம். அது கண்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.