இதுதான் ராஜா பரீட்சித்தின் சரிதம். தன் கடைசிக் காலத்தில் ஸ்ரீசுகப் பிரம்மத்தால் ஸ்ரீமத் பாகவதம் கேட்டு நற்கதி அடைந்தார் பரீட்சித்து மகாராஜா. ஸ்ரீமந் நாராயணனின் அருளால் ராஜா நற்கதி அடைந்தபோதும், விஷ்ணு பக்தரான அவரைத் தீண்டிய பாவம் பீடித்ததால், அந்தப் பாம்பு சாபத்தை அடைந்தது. இந்த சாபத்தில் இருந்து விடுபட என்ன செய்வது என்று ஸ்ரீ விஷ்ணுவை நோக்கி தவம் இருந்து கேட்டது அந்தப் பாம்பு. அதற்காக நேரில் தோன்றிய ஸ்ரீவிஷ்ணு, சாப விமோசனத்துக்கு வழியும் கூறி, தன்னை வழிபட்ட பாம்புக்கு வரமும் தந்தருளினார். அந்தப் பாம்பே கார்க்கோடகன். ஸ்ரீ நள மகாராஜாவைத் தீண்டி அவரின் சாபத்துக்கு வழி ஏற்படுத்தியதும் இந்தப் பாம்புதான். எனவே, இவ்விரு சாபங்களில் இருந்தும் விடுதலை பெற பகவானை நோக்கி கார்க்கோடகன் தவம் செய்த பூமியே இன்று கோடகநல்லூர் என்று அழைக்கப்படும் கார்க்கோடகநல்லூர் திருத்தலம். இங்கே கார்க்கோடகன் என்னும் பாம்புக்கு பகவான் சாப விமோசனம் அளித்ததுடன், சர்ப்ப தோஷத்தால் அவதிப்படுபவர்களின் தோஷங்களையும் நீக்கி அருள்கிறார்.