

தீபங்களின் திருநாள், இருள் அகற்றி, ஒளி பரப்பும் உன்னதத் திருநாள் தீபாவளி. நம் அக அழுக்கைப் போக்கி, உள்ளத்தில் வெளிச்சத்தின் ஆளுமையை விதைக்கும் திருநாள்.
இது மட்டும்தானா.. தீபாவளிக்கு என்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன. நாடு முழுதும் ஒரே திருநாளாக தீபாவளி கொண்டாடப்பட்டாலும், ஒரே மாதிரியாகக் கொண்டாடப் படுவதில்லை. ஒவ்வொரு இடத்துக்கும் இவ்விழாவைக் கொண்டாட ஒவ்வொரு காரணம் உள்ளது.
ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தியன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் படுகின்றது.
மகாவிஷ்ணு தனது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில் மகாபலி சக்ரவர்த்தியின் சிறையிலிருந்து மகாலட்சுமியை மீட்ட தினம் தீபாவளித் திருநாள் என்பர். தீபாவளியில் மகாலட்சுமியை சிறப்பாக வணங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனைக் கொன்று அவனுடைய சிறையில் இருந்த 16,000 பெண்களைக் காப்பாற்றிய நாளாக தீபாவளி பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
ராமாயண இதிகாசத்தில், ஸ்ரீராமர், ராவணனை வதம் செய்து, தனது வன வாசத்தையும் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாள் இது என்பதால், இந்த தினத்தில் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த மகரிஷி நிர்வாணம் அடைந்த நாள் இந்நாளே.
ஜைன மதத்தைத் தோற்றுவித்த மகாவீரர் தீர்த்தங்கரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி நாள். எனவே இந்த தினம், சமணர்களுக்கும் முக்கிய தினமாகக் கருதி, கொண்டாடப்படுகிறது.
சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு முக்கிய தினமே. 1577ஆம் ஆண்டில் அமிர்தசரஸில் பொற்கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட தினம் அன்றுதான். 1619ம் ஆண்டில் ஆறாவது சீக்கிய குரு ஹர் கோவிந்த் மற்றும் 52 அரசர்கள், மொகலாய மன்னர் ஜஹாங்கீரின் பிடியில், குவாலியர் கோட்டையில் இருந்து வெளியேறிய தினம் தீபாவளியே.
மாமன்னன் விக்ரமாதித்தன் முடிசூட்டுவிழா தீபாவளி நாளில் நடந்தது. எனவே இந்நாள் வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் உன்னத நாளாகவும் அமைந்துள்ளது. அவனது பெயரால்தான் விக்ரம சஹாப்தம் அமைந்தது.
கெüரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றனர். அமாவாசை தினத்தில் நாடு திரும்பியவர்கள், தாங்கள் விரும்பியபடி தீபங்கள் ஏற்றி தீபத் திருநாளாகக் கொண்டாடினர்.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இந்த தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவெடுத்ததாக புராணங்கள் கூறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.