/

நலம் தரும் நடப்பூர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாற நாயனார். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரையே தமது ஞான ஆசிரியராகக் கொண்டு வாழ்ந்து மோட்சம் அடைந்தவர்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2013, 10:58 am

எஸ். வெட்கட்ராமன்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாற நாயனார். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரையே தமது ஞான ஆசிரியராகக் கொண்டு வாழ்ந்து மோட்சம் அடைந்தவர். சிவபெருமானைப் போற்றும் யாகத்தை விதிமுறை தவறாமல் செய்து வந்தவர். திருவம்பர் என்ற திருத்தலத்தில் வாழ்ந்த இவர் ஒருமுறை, தான் செய்யவிருக்கும் சோமாயாகத்திற்கு திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதற்கு சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மறுக்க முடியாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டு திருவாரூர் பெருமானிடம் வந்து வேண்டுகோள் விடுத்தார். செவிமடுத்த இறைவன் இசைந்து தான் வரும் வேடம் தெரிந்து நாயனார் அவிர்பாகம் தர வேண்டும் என்று பணித்தார். நாயனாரும் அதற்கிசைந்தார். ஆனால் யாகம் நடைபெறும் இடத்திற்கு தியாகராசப் பெருமான் நீச வடிவினராய் வருகை தந்தார். நாயனாரும் அவர் மனைவியும் விநாயகப் பெருமான் அருளால் வந்திருப்பது இறைவன்தான் என்று அறிந்துகொண்டு அவரை வீழ்ந்து வரவேற்க, இறைவன் மகிழ்ந்து நாயனாருக்கு காட்சியளித்தார். உமாதேவியுடன் அந்த யாகத்தில் அளிக்கப்பட்ட ஹவிûஸ கொண்டு அருளினார். இன்றும் ஆண்டுதோறும் சோமயாக உற்ஸவம் திருஅம்பர் மாகாளம் என்ற தலத்தில் (பேரளத்திலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவு) சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்வாறு நாயனார் பொருட்டு அம்மையப்பன் புலவன், புலத்தியர் வேடம் தரித்து யாகத்திற்கு நீச வடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்து கள்குடம் பொங்கிய இடம் ""பொங்குசாராய நல்லூர் (வழக்கில் கொங்கராய நல்லூர்)'' என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிபட்ட இடம் "அடியுக்கமங்கலம்

(வழக்கில் அடியக்க மங்கலம்)'' என்றும், இறந்த கன்றை ஏந்திய இடம் ""கடாமங்கலம்'' என்றும், திருநடனம் புரிந்த இடம் ""நடப்பூர்'' என்றும் வழங்கப்படுகிறது.

நடப்பூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள ஈசன் ஸ்ரீநடனபுரீஸ்வரர் என்றும், அம்பிகை நடந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். மிகவும் சிதிலமடைந்த இவ்வாலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு செப். 1 அன்று மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

அமைவிடம்: திருவாரூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது நடையூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.