தீராத நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்!

இந்தப் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்தான் கொல்லி மழவன் என்னும் மன்னன்.
தீராத நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்!
Updated on
1 min read

மழநாடு' என்று அழைக்கப்பட்ட பகுதி. இந்தப் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்தான் கொல்லி மழவன் என்னும் மன்னன். அவனுடைய ஆட்சியில் எல்லா வளமும் இருந்தன. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், மன்னன் மகிழ்ச்சியின்றித் தவித்தான். அதற்குக் காரணம், அவனுடைய மகள் தீராத நோய் கண்டு உருகிக் கரைந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தான். ஆனாலும், அவன் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான்.
 அதே நேரம், அந்தத் தலத்துக்கு திருஞானசம்பந்தப் பெருமான் வந்தார். பெருமானின் முன்பு கிடத்தப்பட்ட பெண்ணைக் கண்டார். அங்கிருந்தவர்கள் மன்னனின் மகள் குறித்துச் சொல்ல, இரக்கம் கொண்ட சம்பந்தர், நடராஜப் பெருமானைக் குறித்து பதிகம் பாடினார். சம்பந்தப் பெருமான் பாடப்பாட, அதைக் கேட்ட நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடினார். மன்னனின் மகளைப் பீடித்திருந்த முயலகன் என்னும் கொடிய நோயை நீக்கி, நாகத்தின் தலையில் நடனம் ஆடினார். மன்னனின் மகளும் குணமடைந்து எழுந்தாள்.
 இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள
 நடராஜர், தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் அருள் புரிகிறார். இவரை சர்ப்ப நடராஜர் என்று அழைக்கின்றனர்.
 இந்தத் தலத்துக்கு அருகே அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்கு எதிரே தாமிரபரணி என்ற தீர்த்தமும், அதன் கரையில் மிகப் பழைமையான வன்னி மரமும் உள்ளன.
 திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்டது இந்தத் தலம். வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி காமிக ஆகம விதிப்படி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.
 தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும். சுந்தரருக்கு சிவபெருமான் அளித்த பொன், மாற்றுக் குறைந்ததா என்பதை அறிய உரைகல்லில் உரைத்து, மாற்றுக் குறைத்துக் காட்ட, சிவபெருமான் மாற்றறிந்ததால் இவருக்கு மாற்றுரைவரதேசுவரர் என்று திருநாமம்.
 திருவாசி என்றும், திருப்பாச்சிலாச்சிரமம் என்றும் வழங்கப்படும் இக்கோவில், திருச்சியிலிருந்து முசிறி வழியாக நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com