மாந்திரீக தொல்லை போக்கும் வாராகி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு அருகே அமைந்துள்ளது வாராகி அம்மன் ஆலயம்.
மாந்திரீக தொல்லை போக்கும் வாராகி!
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு அருகே அமைந்துள்ளது வாராகி அம்மன் ஆலயம். 51 சக்தி பீடங்களில், எட்டாவது பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் கீழ் பற்கள் விழுந்த இடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது.

இங்கு அன்னை வாராகி என்ற பெயரிலும், இறைவன் மஹாருத்ரர் என்ற பெயரிலும் எழுந்தருள்கின்றனர். நேபாளத்தில் இந்த அன்னையை, பராகி என்று அழைக்கின்றனர். ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள பாதாள குகையில் எழுந்தருளியுள்ள அம்மன், தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பைஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, நள்ளிரவில்தான் அன்னையைக் காண முடியும். அதாவது, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. 12 மணி முதல் சூரிய உதயம் வரை கோயில் நடை திறந்திருக்கும். விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு கோயிலின் நடை சாத்தி விடுவது வழக்கம்.

தற்போது வாராகி தேவி அருள்புரியும் இந்தக் கருவறையில் முன்னோரு காலத்தில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள். அந்த ஊரில் இருந்த ஒரு மந்திரவாதி, அவனது தபோ வலிமையைக் கொண்டு காளியம்மனை மந்திரத்தால் கட்டுப்படுத்தி சக்தியை ஒடுக்கி வைத்திருந்தான். தேவர்களையும், மக்களையும் வதைத்து, பல இன்னல்களை செய்து வந்தான்.

ஒருநாள் அவ்வூரில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அன்னை, விஷ்ணுவின் அவதாரமான வராக அவதாரம் எடுத்து, கடல் வழியே இந்த ஆலயத்தை வந்தடைந்தாள். மந்திரவாதியை வதம் செய்து, காளியம்மனை மந்திரக் கட்டுக்குள் இருந்து காப்பாற்றினாள். மந்திர காளியம்மன் நன்றி தெரிவித்ததோடு இங்கேயே தங்கும்படி கேட்டுக்கொண்டதால், மக்களைக் காத்தருள வாராகி அம்மனாக எழுந்தருளினாள்.

மற்றொரு புராணத்தில்... அந்தகாசுரன் மற்றும் ரத்தபீக்ஷôசுரன் என்னும் அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட ஈசன் அசுரர்களை அழிப்பதற்காக, விஷ்ணுவின் அம்சமான வராக அவதாரத்தில் அன்னையை உருவாக்கினார். அன்னையும் அசுரர்களை வதம் செய்து தேவர்களைக் காத்தாராம்.

இத்தகைய பெருமை வாய்ந்த வாராகி அம்மனை பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கினால் அனைத்து தொல்லைகளும் நீங்கப்பெற்று சுகம் பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com