/

நரசிம்ம ஜெயந்தி விழா!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :16 மே 2013, 11:18 am

எஸ். வெட்கட்ராமன்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த உற்ஸவத்தையொட்டி நடைபெறுவதோ பக்தி ரஸ  நாட்டிய நாடகங்கள். இன்றல்ல, நேற்றல்ல கடந்த 367 ஆண்டுகளாக இடைவெளியின்றி நடைபெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அல்லவா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் இந்த  நாடகங்களில் முக்கியமானது "ஸ்ரீபிரகலாத சரித்திரம்'.

நரசிம்ம ஜெயந்தி உற்ஸவத்தன்று இரவு நடத்தப்படும் இந்த பாகவத மேளா நாட்டிய நாடகத்தில் அசுர வேந்தனான ஹிரண்ய கசிபுவின் ஆக்ரோஷத்தையும், லீலாவதியின் புத்திர பாசத்தையும், ""மாசற்ற  பக்தி ஒன்றே மாதவனுக்கு மனமுவந்தது; மற்றதெல்லாம் வீண்'' என்று வற்புறுத்தி வாதாடும் பிரகலாத பக்தியையும் ரசிக்கலாம். நிறைவாக அக்ரகார வீதியில் விடியற்காலையில் நடைபெறும்  தத்ரூபமான நரஸிம்ம அவதாரக் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்கென்று பிரத்யேகமாக பூஜிக்கப்பட்டு வரும் நரசிம்ம முகமூடியை தரித்துக்கொண்டு இந்த நரசிம்ம அவதாரக் காட்சி  நடத்தப்படுகிறது.

தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் தோன்றிய இந்த தெய்வீகக் கலையம்சம் பொருந்திய நாடகங்களின் வசனங்கள், கீர்த்தனங்கள் ஆகியவை தெலுங்கு மொழியில் அமைந்தாலும் எளிதில்  புரியும்படியாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன. இந்த ஆண்டு ஸ்ரீநரசிம்ம ஜயந்தி உற்ஸவம் சாலியமங்கலத்தில் மே 23 தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது.

அமைவிடம்: தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சாலியமங்கலம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிள்ளது.

தகவலுக்கு: 98949 37368.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.