எண்ணியது நிறைவேற்றும் ஸ்ரீகாமாக்யா தேவி

51 சக்தி பீடங்களில் முதல் தலமாகத் திகழ்கிறது ஸ்ரீகாமாக்யா தேவி திருக்கோயில்.
எண்ணியது நிறைவேற்றும் ஸ்ரீகாமாக்யா தேவி
Updated on
1 min read

51 சக்தி பீடங்களில் முதல் தலமாகத் திகழ்கிறது ஸ்ரீகாமாக்யா தேவி திருக்கோயில். அன்னையின் உடற்கூறுகளில் தலை பாகம் விழுந்த இடமாகக் கருதப்படும் இது, அசாம் மாநிலத்தில் உள்ள  கவுகாத்தியில் அமைந்துள்ளது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம். அஸ்ஸாமை ஆட்சி செய்த மன்னர்களால் புனர் நிர்மானம் செய்யப்பட்ட இந்த ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில்

கோயில் போன்ற வடிவமைப்பு இருக்கும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே காணப்படும். குகைக்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்கி கருவறைக்குச் செல்ல வேண்டும். உள்ளே அடர்ந்த  இருள்தான். கையில் விளக்கை வைத்துக் கொண்டுதான் இறங்க முடியும். பாதாளத்தில் அன்னையின் சக்தீ பீட கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும். கருவறையில் சிறிய பாறை போன்று மேடை. சுற்றிலும் தண்ணீர் வலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில்தான் காமாக்யா தேவியின் யோனி பீடம் அமைந்துள்ளது.  இதை பூசாரியின் உதவியோடுதான் தரிசனம் செய்ய முடியும்.

குகையிலிருந்து வெளியேறும் போது காமேஸ்வர - காமேஸ்வரி சிலைகள் எட்டு வித அமைப்பில் உள்ளதைக் காணலாம். மேடையின் கீழ் ஓடும் தண்ணீரை சவுபாக்கியகுண்டம் என்கிறார்கள்.  பிராகாரத்தில் காமாக்யாதேவி தசமகாவித்யா என்ற பெயரில் பத்து விதத் தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். மறுகரையில் மயில் மலை எனப்படும் சிறிய குன்றில்தான் சிவபெருமானின் தவத்தைக்  கலைத்த மன்மதனை, தன் நெற்றிக் கண்ணால் எரித்து காம தகனம் செய்தாராம். இதன் அருகில் உமானந்த சிவா கோயில், அருகே அனுமன் கோயில் உள்ளது. இதை தரிசித்து விட்டே காமாக்யாவின்  குகைக் கோயிலுக்குள் செல்வது வழக்கம். இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனி வடிவப் பாறையையே தேவியாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தேவியை வழிபட்டு நலம் பெறுகின்றனர். மனத்தில் எண்ணியதை எண்ணியபடி நடத்தித் தரும் சக்தி இங்கே தேவிக்கு உண்டு. வசந்த காலத்தில் ஆண்டுக்கு  மூன்று நாட்கள் கோயில் மூடப்படுகிறது. விலக்காகி இருக்கும் நாள்கள் எனக் கூறப்படும் இந்நாட்களில் பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீரூற்று செந்நிறத்தில் வருவது ஓர் அதிசயம். அந்நாட்களில்

பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகியர் பலர் ஒன்றுகூடி வழிபாடு செய்கின்றனர். அதன் மூலம் தங்களின் சக்தியை அதிகரித்து  கொள்கின்றனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com