முக்கண்ண பெருமானுக்குரிய முக்கிய விசேஷ நாட்களில் ஒன்று பிரதோஷம். தினந்தோறும் மாலையில் வருவது பிரதோஷம் என்றாலும் வழக்கத்தில் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் திரயோதசியன்று வரும் மாலை நேரத்தையே பிரதோஷம் என சிறப்பாக அழைக்கின்றோம். இதில் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தை அதிக சிறப்புடையதாகப் போற்றுகின்றனர். ஏனென்றால் சிவபெருமான் விடமுண்டு, சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை ஆடினார் என்பதால் சனிப்பிரதோஷத்திற்கு சிறப்பு உண்டு. பிரதோஷ கால வழிபாடு, தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிலவச் செய்யும் என்று புராணங்கள் கூறுகின்றன.