நவக்கிரகங்களில் சிவபெருமானுக்கு இணையாக "ஈஸ்வரன்' பட்டம் பெற்றவர் சனி பகவான்! இவர், "ஈஸ்வரன்' பட்டம் பெற்ற திருத்தலம் திருக்கொள்ளிக்காடு. இத்தலத்து இறைவனின் திருநாமம் "மிருதுபாத நாயகி' எனப்படும் "பஞ்சிலும் மெல்லடியாள்'; இறைவன் "அக்னீஸ்வரர்' என்றழைக்கப்படும் "திருக்கொள்ளிக்காடர்!'
நன்செய் நிலங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும் அதன் மகிமைகள் ஏராளம்! பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் இவ்வாலயத்தில் சனிப்பெயர்ச்சி போன்ற விசேஷ தினங்களில் கூட்டம் அலைமோதும்.
"சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பவரும் இல்லை' என்பார்கள். திருக்கொள்ளிக்காடு திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் சனி பகவான் பொங்கு சனீஸ்வரர் ஆவார். தம்மை நம்பி வழிபடுவோருக்கு தன பாக்கியத்தை அள்ளித் தருபவர் இவர். திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்ட நளனுக்கு சனி தோஷம் நீங்கியது. ஆனால் அவன் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திருக்கொள்ளிக்காடு சனி பகவானை வழிபட்ட பிறகே திரும்பப் பெற்றான் என்கிறது ஆலய வரலாறு.
பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் கையில் சூலம், வில், அம்பு என்று ஏதேனும் ஆயுதம் இருக்கும். ஆனால் இத்தலத்து சனி பகவானின் கைகளில் எந்த ஆயுதமும் கிடையாது. குபேரேன் வைத்திருப்பதுபோல் வலது மேல் கரத்தில் ஏர்கலப்பைத் தாங்கி அருள்பாலிக்கும் கடவுளாக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார்.
இங்கு, சனீஸ்வரருக்கு தனி சந்நிதி, தனி மண்டபம், தனி விமானம் ஆகியவை உள்ளன. இவரது சந்நிதிக்கு அருகில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. மேலும் சனி பகவான் இங்கு மகாலட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து சகல செல்வங்களையும் அளிக்கிறார்.
இவரது சந்நிதிக்கு நேர் எதிரில் யோக பைரவர் அனுக்கிரக மூர்த்தியாக அமைந்திருக்கிறார். பைரவர் சனீஸ்வரரின் குரு! "குரு பார்வை கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப இங்கு குருவின் நேரடிப் பார்வையில் இருக்கிறார் சனி பகவான். தம்மை நாடி வருபவர்களின் தோஷங்களை நீக்கி நற்பலன்களை அள்ளி வழங்குகிறார்.
கருவறையில் அருள்மிகு அக்னீஸ்வரர் லிங்கத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். மேற்கு பார்த்த சந்நிதி. இடப்புறம் அருள்மிகு மிருது பாதநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. "ஓங்கு புகழ் கொள்ளிக் காடரே' என்று திருஞான சம்பந்த சுவாமிகள் இத்தலத்து இறைவனை வணங்கி பதிகம் பாடியுள்ளார். ஆலயத்தின் சுற்றுச் சுவரில் வில்லேந்திய வேலவனை வள்ளி, தெய்வானையுடன் தரிசிக்கலாம்.
சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் சனி பகவானுக்கு பிரீதியாக ஜபம், தானம், அர்ச்சனை, அபிஷேகம் போன்றவை செய்வதால் தீய பலன்கள் குறைந்து சகல சுகங்களும் கிடைக்கப்பெறுவர்.
இத்தலத்து இறைவனையும் அம்பிகையையும் பொங்கு சனீஸ்வரரையும் தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபட்டு வர, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். தொடர்ந்து ஐந்து வாரங்கள் வழிபட, மனநோய் முற்றிலும் குணமாகி, சுகவாழ்வு அடைவர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்ட ஆயுள், மன அமைதி, புத்திர பாக்கியம், செல்வம், பதவி, கௌரவம், அந்தஸ்து, வெற்றி போன்ற அனைத்தையும் வழங்கி அருளுகிறார் இந்த பொங்கு சனீஸ்வரர்.
தொடர்புக்கு: 04369 237454/ 95853 82152.
- மாயூரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







