பாதை காட்டிய பார்க்கவப்பிரியர்!
சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில் கி.பி. 1009 -ஆம் ஆண்டு வீரராகவர், கமலாம்பாள் தம்பதிகளுக்கு நான்காவது மகனாக மாசி மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், " சேனை முதல்வரின் "அம்சமாக, வாணிபர் குலத்தில்


சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில் கி.பி. 1009 -ஆம் ஆண்டு வீரராகவர், கமலாம்பாள் தம்பதிகளுக்கு நான்காவது மகனாக மாசி மாதம் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், " சேனை முதல்வரின் "அம்சமாக, வாணிபர் குலத்தில் அவதரித்தவர் திருகச்சி நம்பிகள்! திருமழிசை ஆழ்வாருக்கு பார்கவன் என்ற பெயரும் உண்டு. அவருக்கு ஆப்தனாக இருந்த இவர், "பார்கவப்பிரியர்' என்று அழைக்கப்பட்டார்.
காஞ்சி பேரருளாளப் பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கரியம் பல காலம் செய்தவராதலால் வைணவர்கள் இவரை திருக்கச்சிநம்பிகள் (கச்சி-காஞ்சி) என குறிப்பிடுகின்றனர். திருமழிசைப் பிரானின் உத்தரவுப்படி, திருவல்லிக்கேணி எம்பெருமானுக்கு, புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். பின்னர், காஞ்சி ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு , திருவாலவட்ட கைங்கர்யங்கள் செய்து வந்தார். விசிறி வீசும் போதே ஆத்மார்த்தமாகப் பேசக் கூடிய அருளையும் இவருக்கு தேவப் பெருமாள் அருளியிருந்தார்.
திருமணமாகி பல காலமாகியும் ஸ்ரீபெரும்பூதூர் கேஸவ சோமாயாஜிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காக திருவல்லிக்கேணி புத்ரகாமேஷ்டி யாகம் நடக்கும்போது கூட இருந்து உதவிகள் செய்தார். அதன் விளைவாக, ஆதிசேஷன் அம்சமாக இளையாழ்வார் (ராமானுஜர்) அவதரித்தார்.
ஒரு நாள் எம்பெருமானார் ராமானுஜர், தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிக்கக் கேட்டார். தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாருக்கு ஆசார்யனாகும் தகுதி தனக்கு கிடையாது என்று தன்னுடைய இயலாமையை எடுத்துக் கூறினார். சாஸ்திரங்களில் தனக்கு இருந்த அதீத நம்பிக்கையினால் திருக்கச்சி நம்பிகளின் கூற்றை இளையாழ்வார் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.
ஒருமுறை இளையாழ்வார், திருக்கச்சிநம்பிகளை, தமது அகத்தில் பாகவத சேஷத்திற்காக அமுதுண்ண அழைத்தார். இளையாழ்வார் வரும் முன்னே, மனைவி தஞ்சமாம்பாள் நம்பிக்கு உணவிட்டு சாப்பிட்ட இலையை ஒரு கோலால் வெளியில் தள்ளி, அந்த இடத்தினை சுத்தி செய்ததைக் கேட்டு மிக்க துயரமுற்றார். அந்த அளவிற்கு, திருக்கச்சிநம்பிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தவர் எம்பெருமானார்.
எம்பெருமானாருக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் தொடர்பாக வந்த பல சந்தேகங்களுக்கு திருக்கச்சிநம்பிகளும் தேவப் பெருமாளிடம் கேட்டு, சந்தேகங்களை நீக்கும் விதமாக ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார். அவை,
ன்நாமே பரம் பொருள். ன்ஆன்மா- பரமாத்மா வேறுபட்டதே. ன்மோட்சத்திற்கு சிறந்த உபாயம் , ப்ரபத்தியே. ன்அந்திம ஸ்ருதி வேண்டியதில்லை. ன்சரீர முடிவில் மோட்சம் உண்டு. ன்பெரிய நம்பிகளையே ஆச்சாரியனாகக் கொள்ளவும். என்பதைக் கூறினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு "ஸ்ரீராமானுஜர்' என்ற திருநாமத்தை ஏற்றார்.
திருக்கச்சிநம்பிகள் தேவப் பெருமாளிடம் நேரில் பேசும் போது, அவரிடம் இருந்து ஏழு கருத்துக்களைப் பெற்றார். வேத சாரங்களைத் தெரிந்து கொள்ளல், பாகவதற்கு உதவுதல், இறைவனை அடைதல், வைணவன் என்பதை மனதில் கொள்ளல் மற்றும் அனைத்து வைணவர்களும் உயர்ந்தவர்களாக எண்ணல், வைணவர்களில் உயர்வு தாழ்வு கிடையாது என்பதை உணர்ந்து செயல்படல். நல்ல வைணவனாக இருந்து அவர்களோடு பழகி அவர்களின் வைணவர் திருவடி தீர்த்தம் ஏற்க வேண்டும் என்ற கருத்துக்களைப் பெற்றார். இவையே, ராமானுஜரின் பிற்கால நெறிமுறைக்கும் உபதேசங்களுக்கும் அஸ்திவாரமாக
அமைந்தன என்பவர்களும் உண்டு.
திருக்கச்சிநம்பிகள் , ஒரு சமயம், " நாம் உமக்கு ஆலவட்டம் வீசி, கைங்கர்யம் செய்கிறேனே எனக்கு பரமபதம் எப்பொழுது கிட்டும்?' என்று, தேவப்பெருமாளிடம் கேட்க, அவரோ "உமக்கு பரமபதம் கிடையாது " என்றார். அதிர்ந்த நம்பிகள், எம்பெருமானிடம் "ஏன் எனக்கு பரமபத ப்ராப்தி இல்லை?' என்று கேட்க, அவரும் " நீர், ஆலவட்டம் வீசினதற்கு, நாம் உம்மிடம் பேசினோம். ஆக, வீசியதற்கு, பேசியது சரியாகப் போய் விட்டது.! மேலும் உமக்கு பரமபத ப்ராப்தி கிடைக்க வேண்டுமென்றால் முதலில் ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வாரும் என்றார்.
ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால்தான், பரமபதம் கிட்டும் என்ற நிலையில், திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று , ஒரு மாடு மேய்ப்பவனாக வேடமிட்டுக் கொண்டு, அவரிடம் சேர்ந்து , ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வந்தார். பலநாள் கழித்து இதைத் தெரிந்துகொண்ட திருக்கோட்டியூர் நம்பி , அவரிடம், " இப்படி செய்யலாமா" என்று கேட்டு, திருக்கச்சிநம்பிகளை ஆசிர்வதித்து, காஞ்சிக்கு திருப்பி அனுப்பினார். நம்பிகள், " தேவராஜ அஷ்டகம் " என்ற எட்டு அற்புத ஸ்லோகங்களை அருளிச்செய்தார்.
இப்பூவுலகிலே பல்லாண்டுகள் ஜீவித்த , திருக்கச்சிநம்பிகள், அந்திமக் காலத்தில் ஆளவந்தாரை, நினைத்துக் கொண்டே பரமபதம் எய்தினார். தினமும் காஞ்சிக்கு சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையின்கண் ஏற்பட்ட தள்ளாமையால் தன் இல்லத்திலிருந்த படியே திருமாலை வேண்ட , பெருமாள் தாம் உறைகின்ற கோலத்தைக்காட்டி, முக்தி அருளினார். அத்தலமே இன்று பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகில் திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராசப் பெருமாள் கோயில் என வழிபாட்டில் இருந்து வருகிறது.
திருக்கச்சிநம்பிகளின் திருஅவதார திவ்ய மஹோத்சவம், அவரது அவதாரத் தலமான சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றது. 15.02.2018 முதல் 24.02.2018 வரை 10 தினங்கள் திருமஞ்சனம், வாகனப் புறப்பாடு, சாற்றுமுறையுடன் சிறப்பாக நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 044 2627 2066/ 98848 08708.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...