பொன்மொழிகள்!

காய்க்காக மரம் பூக்கிறது. காய் தோன்றியதும் பூ உதிர்கிறது. அதுபோல, ஞானத்திற்காக வினை செய்தால், ஞானம் கிட்டியதும் வினை அழியும். 
பொன்மொழிகள்!
Updated on
1 min read

காய்க்காக மரம் பூக்கிறது. காய் தோன்றியதும் பூ உதிர்கிறது. அதுபோல, ஞானத்திற்காக வினை செய்தால், ஞானம் கிட்டியதும் வினை அழியும். 
- கபீர்தாசர்

ஆத்மாதான் இந்த அழியும் உடலில் ஜீவனைப் புகுத்தி இயங்க வைத்திருக்கிறது. ஜடமான இந்த உடலில் உணர்வையும், அறிவையும் வைத்திருக்கிறது. இந்த  அவலட்சணமான மேனிக்கு மினுக்கும், வனப்பும் ஊட்டுவதும் அதுவே.

ஆத்மாவின் இயக்கத்தாலும் உதயத்தாலுமே ஜீவராசிகளின் வாழ்க்கை மலர்கிறது; இயங்கி வருகிறது. - ரிக் வேதம்

பாலில் வெண்ணெய் மறைந்திருப்பது போன்று ஆத்மா உயிர்களில் வசித்திருக்கிறது. அது மனம் என்னும் மத்தால் கடையப்பட வேண்டும். - அம்ருத பிந்தூபநிஷதம்

காரணத்துக்கு அந்நியமாய்க் காரியமில்லை. உதாரணம்: மண்ணினால் உண்டாக்கப் பெற்ற பானை முதலிய பண்டங்கள், மண்ணுக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, நூலினால் நெய்யப் பெற்ற புடவைகள் நூலுக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, தங்கத்தால் செய்த ஆபரணங்கள் தங்கத்துக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, இரும்பினால் செய்த ஆயுதங்கள் இரும்புக்கு அந்நியமாக எப்படிக் காணவில்லையோ, அதுபோல் பிரம்மத்தால் உண்டாக்கப் பெற்ற பிரபஞ்சங்கள், பிரம்மத்தைத் தவிர வேறில்லை என்று அறிவது. - வாசுதேவ மனனம்

நீ களங்கமற்ற புத்தியால் ஆராய்ந்து பார்த்தால், இறைவனை அறிவாய்.

மேகம் இல்லாத ஆகாயத்தில் சூரியன் மிளர்வது போன்று, ஆத்மாவைச் சூட்சுமக் கண்களால்தான் அறிய முடியும்.

எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் ஆத்மா விளங்குகிறது. ஆதலால் வெறும் புத்தியின் பிரமாணத்திற்குள் ஆத்மா அடங்கியது அல்ல. ஆகவே ஸ்தூல கண்களால் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ""ஆத்மாவை எனக்குக் காட்டு'' என்று சொல்வது, ""என் கண்களை எனக்குக் காட்டு'' என்பது போலாகும்.

தனியிடத்தில் அமர்ந்து, தெளிவாக விசாரித்து, "என்னுடையது' என்பவை எல்லாம் தள்ளியபிறகு, எதைத் தள்ள முடியவில்லையோ அதுவே ஆத்மா ஆகும். - திரிபுர ரகஸ்யம்

ஆத்மா என்பது ஒரு பெரிய சமுத்திரம். கை கால் முதலிய இந்திரியாதிகள் அதில் மிதக்கும் பனிக்குன்றுகள். ஞான சூரியன் உதயமானதும் அவை ஆத்மாவில் கரைந்து நாமரூபம் முதலியவற்றை இழக்கின்றன. - வேதாந்தம்

ஐம்பூதங்களும் எப்படி உண்மையானவையோ, அப்படி ஆத்மாவும் உண்மையானது. - யக்ஞவல்கியர்

அகண்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத்தையும் உண்டு பண்ணி, புத்திமான்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத் தன்மைகளைக்
கொள்ளும்படியாக மாயை மயக்குகிறது. ஆகையால் நிகழாததை நிகழச் செய்வதில் வல்லது மாயை. - மாயா பஞ்சகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com