/

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்(21/05/2021)

நாம் ஒரு பொருளை வெறுக்கும்போது, அதிலுள்ள உயர்ந்த குணம் நமக்குத் தெரியாது. அதுபோலவே நாம் ஒரு பொருளை விரும்பும்போது, அதிலுள்ள குறையும் நமக்குத் தோன்றாது. 

News image
Updated On :21 மே 2021, 10:23 am

* நாம் ஒரு பொருளை வெறுக்கும்போது, அதிலுள்ள உயர்ந்த குணம் நமக்குத் தெரியாது. அதுபோலவே நாம் ஒரு பொருளை விரும்பும்போது, அதிலுள்ள குறையும் நமக்குத் தோன்றாது. 
-முனைப்பாடியார்
* இறைவனின் திருவருள், தற்பெருமையும் கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும். 
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
* எந்த விதத்திலும் கொலை செய்யாதவர்கள், அனைத்தையும் சகித்துக் கொள்பவர்கள், அனைவருக்கும் அடைக்கலம் கொடுப்பவர்கள் ஆகியவர்கள் சொர்க்கம் போவார்கள். 
-ஹிதோபதேசம்
* கேட்காமல் இருக்கும் பொழுது கொடுப்பவனுடைய பெருமையே பெருமையாகும்.
-சீக்கியம்
* நாம் விருப்பப்பட்டு தேடிச் சேர்க்கும் பல்வேறு பொருள்கள் நிலையில்லாதவையாகும். அவையெல்லாம் ஒருநாள் அழிந்துவிடக் கூடியவையே. எனவே, என்றும் அழியாத சிவபெருமானின் திருவடிகளை அடையுங்கள். 
-இடைக்காட்டுச் சித்தர்
* மதுபானம் கெட்டது. அது ஒரு தலைமுறையைக் கெடுத்துவிடும். ஆனால் புகையிலை எல்லாத் தலைமுறைகளையும் கெடுத்துவிடும்.
-குருகோவிந்த சிங்
* யாது சொல்லினும் கேளாது அந்தோ! உலக மக்கள் "யான், எனது' என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறார்களே! என் செய்வது? 
-வடலூர் வள்ளலார்
* இளவயதில் தூய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; அறவழியில் பொருள் சேர்க்க வேண்டும். அவ்விதம் செய்யாதவர்கள் மீன் பிடிக்க இயலாத வயோதிகக் கொக்கைப் போன்று அல்லல்படுவார்கள்.
-தம்மபதம்
* மனமே! நான் பலவகையான பாவங்களால் புழு முதல் பலவிதமான உடல்களை அடைந்தேன். அந்தப் பிறவிகளில் நீயும் அந்த உடல்களில் பகுத்தறிவற்று இருந்தாய். ஆனால் இப்போது ஏதோ நற்செய்கையின் பயனாக மனித உடல் கிடைத்திருக்கிறது. இந்த உடலிலும் நீ முன்பு போலவே பகுத்தறிவற்று இருந்தாயானால், "மனித உடலைப் பெற்று என்ன பயன்', சொல்?
-மாநúஸாத்போதனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.